தில்லி சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 62 எம்.எல்.ஏ-க்களில் 54 எம்.எல்.ஏ-க்கள் அர்விந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், அரசை கவிழ்க்க முயல்வதாகவும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டி வந்தார். இதனால் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது இது இரண்டாவது முறையாகும். இந்த நிலையில், இன்று காலை கூடிய தில்லி சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்.எல்.ஏ-க்களும், பாஜகவுக்கு 8 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். அதன்படி, அர்விந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.