india

img

பெண்களுக்கு எதிராக ரமேஷ் குமார் பேசியிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

புதுதில்லி, டிச.19-
கர்நாடக சட்டமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், பெண்களுக்கு எதிராக உதிர்த்த வாக்குமூலங்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக சட்டமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் பெண்களுக்கு எதிராக உதிர்த்த ஆட்சேபகரமான வாக்குமூலங்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு இவர் கூறிய கூற்றுக்களை சட்டமன்றத்தில் எவரும் ஆட்சேபிக்காததும் இதற்கு இணையான விதத்தில் வருத்தத்தை அளிக்கிறது. இவர் கூறிய வார்த்தைகளைக் கண்டிக்கவோ, அதனைத் தடுத்து நிறுத்தவோ சபாநாயகர் எவ்வித முயற்சியும் எடுக்காததும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை தேசியக் குற்றப் புலனாய்வு பதிவு மையத்தின் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்நிலையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதைக் கிண்டல் செய்திருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாவது தொடர்பாக மிகவும் கூருணர்ச்சியற்ற முறையில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் இருந்து வருவதையே இது பிரதிபலிக்கிறது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் நீண்ட காலத்திற்கு அதன் பாதிப்புகளிலிருந்து வெளிவரமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  
வன்முறைக்கு ஆளான பெண்களுக்காகப் போராடும்போது, காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு மட்டங்களிலும் கூருணர்வற்ற அணுகுமுறையையும், ஆணாதிக்க மனப்பான்மையையும் மாதர் அமைப்புகள் எதிர்கொள்வது தொடர்கின்றன.
அரசாங்கத்தின் தரப்பில் பெண்களுக்காக ஏராளமானப் பிரகடனங்கள் உரத்துச் சொல்லப்பட்டாலும், உருப்படியாக எதுவும் நடைபெறுவதில்லை. பெண்களின் மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதியத்தின் பணம் போதுமானதல்ல என்பது மட்டுமல்ல, அல்லாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமும் வேறு திட்டங்களுக்குச் செலவு செய்திடத் திருப்பிவிடப்படுகிறது.
அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அனைவருக்கும் நீதி கிடைத்திட பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையிலிருந்து தவறும்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)