india

img

ரூ.7755 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வரவில்லை – ரிசர்வ் வங்கி

புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளில், இதுவரை ரூ.7,755 கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில், ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத ரூபாய் நோட்டுகளின் விவரங்கள் குறித்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி, ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவது என ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அப்போது நாடு முழுவதும் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இதைத்தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியிடம் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான கடைசி நாள் 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில், பல்வேறு வழிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. மக்கள், நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அஞ்சல் மூலமாக, ஆர்பிஐ கிளைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி பணமாக மாற்றிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல தரப்பட்ட மக்கள் தங்களிடமிருந்த பணத்தை அருகிலிருந்த வங்களில் செலுத்தி மாற்றிக்கொண்டனர். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு மே மாத இறுதி வரை, ரிசர்வ் வங்கிக்கு 97.82 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. ஆனால், மீதமுள்ள 2.2 சதவீதம், அதாவது சுமார் ரூ.7755 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.