india

img

கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் கோரிக்கை 

புதுடெல்லியில் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரி அம்மாநில அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் அதிகளவு வெப்பம் காரணமாகச் சோர்வடைகின்றனர். 

ஹரியானா மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, மே 4 முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என்று அம்மாநில அரசு திங்களன்று அறிவித்தது.

டெல்லியில் இன்னும் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. தில்லியில் பெரும்பாலான பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகின்றது. 

எனவே, மற்ற மாநிலங்களைப் போல் டெல்லியிலும் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும், கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் பெற்றோர் சங்கத்தின் தலைவர் அபராஜிதா கௌதம் டெல்லி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.