india

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் துயரம்

பாட்னா, செப். 26 - பீகாரில் ஆண்டுதோறும் கொண்டாடப் படும், ‘ஜிதியா’ எனப்படும் ஜீவித்புத்ரிகா பண்டிகையையொட்டி நீர்நிலைகளில் நீராடுவது வழக்கம். அந்த வகையில், பல்வேறு நீர் நிலைகளில் புனித நீராடிய 46 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்களில் 37 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த ஜீவித்புத்ரிகா பண்டிகை என்பது, தங்கள் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் விரதமிருந்து தங்கள் குழந்தைகளுடன் நீர்நிலைகளில் புனித நீராடுவது ஆகும்.

அந்த வகையில், பாட்னா, கிழக்கு சம்பரான், மேற்கு சம்பரான், அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், அர்வால், கோபால்கஞ்ச் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக ‘ஜிதியா’ பண்டிகை புனித நீராடலின்போது தான், 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆளும் பாஜக கூட்டணி அரசு ‘ஜிதியா’ பண்டிகைக்காக ஆறு மற்றும் நீர்நிலை களில் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.