ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் அருகே, ‘காவி ஜேஎன்யு’ என பதாகை வைக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநவமி அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதி உணவகத்தில் இறைச்சி உண்ண கூடாது என பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சார்ந்தவர்கள் தாக்குதல் நடித்தினர். இதைத்தொடர்ந்து தற்போது காவி கொடிகளையும் ‘காவி ஜேஎன்யு’ என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளையும் இந்து சேனா என்கிற அமைப்பு ஒட்டியுள்ளது. பல்கலைக்கழகத்தின் தெற்கு வாயிலில் உள்ள கான்கிரீட் வளைவில் எட்டு கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அனைத்து பதாகைகளை அகற்றியுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ், வெளியிட்டுள்ள காணொளியில், “ஜேஎன்யு வளாகத்தில் காவி நிறம் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. அவ்வாறு செய்பவர்களை எச்சரிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். உங்கள் சித்தாந்தத்தையும் எல்லா மதத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், காவியை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவோம்” என பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.