india

img

ஆக்சிஜன் தட்டுப்பாடு : 13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை....

மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதையும், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைப்பதையும் மத்திய அரசு உத்தரவாதம் செய்திட வேண்டும் என்று நாட்டிலுள்ள பதின்மூன்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவகவுடா, தேசியவாதக் காங்கிரஸ்தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஜம்மு-காஷ்மீர் மக்கள் கூட்டணியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிஆகிய பதின்மூன்று எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுதும் கட்டுப்படுத்த முடியாத விதத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், சுகாதார மையங்களுக்கும் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தைத் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உத்தரவாதம் செய்வதற்குத் தன் அனைத்துக்கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.அதேபோன்று நாடு முழுவதும்அனைவருக்கும் இலவசமாகத்தடுப்பூசிப் போடும் திட்டத்தையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் கோடிரூபாய் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளார்கள். (ந.நி.)

;