india

img

கொரோனா பாதிப்பு மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துக.... மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்...

புதுதில்லி:
கொரோனா பாதிப்பு  அதிகமாக உள்ள மாவட்டங் களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய  அரசு அறிவுறுத்தியுள்ளது.கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட 80 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் நீடித்து வருவதாக ஒன்றிய  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 10 சதவீதத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக ராஜஸ்தான், மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, ஒடிசா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, கேரளா, அருணாச்சலபிரதேசம், இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடிதம்  எழுதியுள்ளது.

அக்கடிதத்தில்,  கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய அளவில் 5 சதவீதத்துக்குள் இருந்தாலும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில்  10 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. ஜூன் 21-27 தேதிகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்,  மாவட்ட அளவிலும் நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து கடுமையான கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியம் ஆகும். எனவே மாநிலம் முழுவதும் நெகிழ்வுத்தன்மையையும், தளர்வுகளையும் அனுமதிக்கிறபோது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.புதுச்சேரியின் மாஹி, கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், கொல்லம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 10 சதவீதத்துக்கும் மேலாக பாதிப்பு உள்ளது.

;