india

img

கொரோனா தடுப்பூசி போட்ட பின் பாதிக்கப்படுவோர் மிகக்குறைவு..... மத்திய அரசின் நிபுணர்கள் தகவல்....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்கள் பயன் பாட்டில் உள்ளன.  இதுவரை நாட்டில் 13 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இதனிடையே, மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் மீதான சந்தேகங்களும், அச்சங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக அரிதாகவே வைரஸ் தொற்று ஏற்படுகிறது. உதாரணமாக, 10 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் அவர்களில் 2 அல்லது 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவது தெரியவந்துள்ளது.கோவாக்சின் தடுப்பூசியை இதுவரை 1.10 கோடி பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் முதல் தவணையை செலுத்திக் கொண்ட 90.3 லட்சம் பேரில் 4,208 பேருக்கு (0.04 சதவீதம் ) மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 17 லட்சம் பேரில் 695 பேருக்கு மட்டுமே பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருகிறது. இதுவும் 0.04 சதவீதம் தான்.

இதேபோல, கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிலும் மிக மிகக் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவும், இந்த நபர்களில் பெரும்பாலானோர் சுகாதார ஊழியர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் ஆவர்.எனவே, கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண்டாம். இப்போதைய சூழலில், இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.

;