நாட்டில் ஒருசிலரிடம் மட்டுமே செல்வாதாரங்கள் குவிந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய் அன்று மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:
நாட்டில் பல்வேறு முரண்பட்ட நிலைமைகளுக்கு நாம் தலைமைதாங்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அரசமைப்புச்சட்டம், நாட்டில் மக்கள் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைத்திட கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கைகளோ சமத்துவமின்மையை அதிகரிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. ‘ஆக்ஸ்ஃபாம்’ இந்தியா அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 1 விழுக்காட்டினர், நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பெற்றிருக்கிறார்கள் என்றும், அதே சமயத்தில், அடித்தட்டில் உள்ள 50 விழுக்காட்டினர் வெறும் 3 விழுக்காடு செல்வத்தையே பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. கோவிட் காலத்தில் மிகவும் விசித்திரமான நிலையை நாம் பார்த்தோம். அதாவது, நாட்டு மக்களில் 84 விழுக்காட்டினர் தங்கள் வருமானங்களை இழந்த அதே சமயத்தில், அல்லது பெற்று வந்த வருமானம் மிகமிகக் குறைந்துவிட்ட அதே சமயத்தில், நாட்டில் இருந்த கார்ப்பரேட்டுகளின் லாபமோ பல்கிப் பெருகியது. கார்ப்பரேட்டுகள் ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் பயன்பெறும்விதத்தில், ஒன்றிய அரசாங்கம் கார்ப்பரேட் வரியைக் குறைத்தது. இது தொடர்பாக ஆக்ஸ்ஃபாம் அறிக்கையானது, பில்லியனர்களின் செல்வம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2.5 கோடி என்கிற விதத்தில் உயர்ந்தது என்று குறிப்பிட்டிருக்கிறது. நேற்றையதினம் மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் ஒன்றிய நிதி அமைச்சர் தொழில் அதிபர்களின் பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், 2,300 பேர்களின் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை வேண்டுமென்றே பணத்தைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் (wilful defaulters) பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த லட்சணத்தில்தான் நாம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஐந்தாவதாக இருக்கிறோம் என்று பீற்றிக்கொண்டிருக்கிறோம். நாட்டின் பொருளாதார நிலை குறித்து சரியானமுறையில் அலசி ஆராயாவிட்டால் அரசாங்கம் தருகிற புள்ளி விவரங்களும், இலக்கங்களும் போலியானவைகளாக மாறிவிடும்.
நாட்டின் உண்மையான சித்திரம் என்ன? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத்திற்கான (per capita GDP) ஏணிப்படியில், நாம் 127ஆவது இடத்தில் இருக்கிறோம். இலங்கைக்கும், ஏன் வங்க தேசத்திற்கும் பின்னே சென்றுவிட்டோம். ஆனால் அதே சமயத்தில் நம் நாட்டில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். உலகில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறோம். அநேகமாக நாம் 169 பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம்.
நேற்றையதினம் ஒரு பக்கத்தில் பங்குச்சந்தை பரிவர்த்தனை பேரணி நடந்தது. அதே சமயத்தில் தில்லியின் நாடாளுமன்ற வீதியில் தலித்துகள், விவசாயத் தொழிலாளர்களின் மாபெரும் பேரணியும் நடைபெற்றதைப் பார்த்தோம். அவர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளைக் கோரிக்கொண்டிருக்கிறார்கள். நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் பங்குச்சந்தை பேரணி. ஏனெனில் ஆட்சியாளர்களின் நண்பர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக நடந்திருக்கிறது. இவ்வாறு நம் நாடு இருவிதமான முரண்பாடுகளுக்கும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசினார்.