புது தில்லியில் தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
புது தில்லியில் வியாழக்கிழமையன்று 6 வயது சிறுமியின் தந்தையை அடையாளம் தெரியாத நபர் சுட முயன்றபோது சிறுமி குறுக்கே வந்ததால் மகளின் தலையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சுமார் 12 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று சிறுமி மூளைச்சாவடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், பெற்றோரின் சம்மத்தில் அவரது இதயம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுமியின் கல்லீரல், லக்னௌவைச் சேர்ந்த கல்லீரல் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறாருக்கு பொருத்தப்பட்டது.
இரண்டு சிறுநீரகங்களும் சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
சிறுமியின் கருவிழிகள் இரண்டு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு கண்பார்வை கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.
இதயக் குழாய்கள் பிறகு பயன்படுத்திக் கொள்ள வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எங்களது மகள் இப்போது இல்லை. ஆனால் உடல் உறுப்பு தானம் மூலம் பல குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார்.