மாஸ்கோ/தில்லி, நவ.26- வேலை தேடிய இந்தியர்கள் பலர் மோசடியான முறையில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு ரஷ்யா-உக்ரைன் போர்க் களத்திற்கு அனுப்பப்பட்ட பிறகு காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா எனவும் தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு காணாமல் போன இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை (MEA) தொடர்பு கொண்டு அவர்களை மீட்க வேண்டும் என மனு கொடுத்த பிறகே இது தெரிய வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்த போது ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமான முறையில் பணியாற்ற வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியர்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது காணாமல் போன இந்தியர்களில் ஒருவர் ஜம்மு-காஷ்மீரின் குபூவா பகுதியில் உள்ள தாங்கதாரைச் சேர்ந்த முகமது அமீன் ஷேக் (65) என்பவரின் 27 வயதான மகன் ஜஹூர் ஷேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடைசியாக 2023 டிசம்பர் 31 அன்று தான் தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தார் எனவும் அதன் பிறகு ஜஹூர் தனது குடும்பத்தினரை தொடர்புகொள்ளவே இல்லை என்ற வருந்தத்தக்க செய்தியும் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அவர் பேசிய போது தான் ராணுவ பயிற்சிக்குச் செல்வதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்கு போனில் கூட தொடர்பு கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் போரில் ரஷ்யாவிற்காக போரிட்ட இந்தியர்கள் சிலர் இறந்ததாக செய்திகள் வெளிவரத் துவங்கியபோது, எங்களுக்கு பயம் வந்து எனது மகனின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தோம். ஆனால் எங்களால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்னும் எங்கள் மகனிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை என்று ஜஹூர் ஷேக்கின் தந்தை அமீன் ஷேக் கூறியுள்ளார்.இது தொடர்பாக ரஷ்ய தூதரகத்திலும் மனு கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் குறைந்தபட்சம் 15 இந்தியர்களின் நிலையை இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை எனவும், ரஷ்ய வெளியுறவுத்துறை ஒத்துழைப்பு கொடுத்தாலும் போர்க் களத்தில் உள்ள ரஷ்ய ராணுவ அதிகாரிகளிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை எனவும் ஜஹூர் ஷேக்கின் மூத்த சகோதரர் அஜாஸ் அமீன் தெரிவித்துள்ளார்.
இதே போல பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசித்து வரும் ஜக்தீப் குமார் என்பவர் மார்ச் மாதம் முதல் தனது சகோதரர் மன் தீப் குமார் (30)காணாமல் போயுள்ளதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் பாஜக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் வேலை தேடிக்கொண்டிருந்த போது வேலை வாங்கித்தருவதாக இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திற்காக போர் புரிய அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார் என தெரிவித்துள்ளார்.