தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுதில்லி, டிச. 3 - எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி குழு பரிந்துரை பேரிலேயே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவில் இணைக்காமல், அரசின் பரிந்துரை பேரிலேயே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகிக் கொண்டுள்ளார்.
அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகிறார் புடின்?
மாஸ்கோ,டிச.3- இந்திய - ரஷ்ய 23-ஆவது ஆண்டு மாநாடு 2025 துவக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியா வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, இந்தியாவிற்கு வருமாறு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படியே புடின் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. எனினும் மாநாடு நடைபெறும் மாதமும் தேதியும் உறுதி செய்யப்படவில்லை.
அய்யா பால பிரஜாபதி அடிகளாரின் மனைவி மறைவுக்கு சிபிஎம் இரங்கல்
சென்னை,டிச.3- அய்யா பால பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணிபாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
அய்யா பால பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணிபாய் டிசம்பர் 2 அன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடித்து மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கும் போராட்டத்தில் அயராது ஈடுபட்டு வரும் அய்யா பால பிரஜாபதி அடிகளாரின் சமூக சேவைக்கு உற்றதுணையாக இருந்தவர் ரமணி பாய் அவர்கள். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, துணைவியாரை இழந்து தவிக்கும் அய்யா பால பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.