மக்களவையில் பாஜக-வின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மக்களவையில் நேற்று சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது, “என்ன சாதி என்றே தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறார்கள்” என பாஜக எம்.பி அனுராக் தாகூர் மறைமுகமாக ராகுல் காந்தியை தாக்கி பேசியிருந்தார். இதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக பதிலடி கொடுத்தார்.
அனுராக் தாகூரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அனுராக் தாகூரின் இந்த பேச்சை அவசியம் கேட்க வேண்டும் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு, மக்களவையில் பாஜக-வின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நேற்று நாடாளுமன்றத்தில் “தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார். அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில் பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.