மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது 12 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பி.எல்.வர்மா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன, அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து மக்களவையில் நுகர்வோர் நல அமைச்சகத்திடம் சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த அளித்த நுகர்வோர் நலன் இணை அமைச்சர் பி.எல்.வர்மா, 4 ஆண்டுகளில் 12 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"நாடாளுமன்றத்தில் நுகர்வோர் நல அமைச்சகத்திடம் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன, அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி (எண் 3815/18.12.2024) எழுப்பி இருந்தேன்.
அதற்கு பதில் அளித்த நுகர்வோர் நலன் இணை அமைச்சர் பி.எல்.வர்மா 2021 - 2024 நிதியாண்டுகளில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது 12,92,728 புகார்கள் வந்துள்ளன என்று பதில் அளித்துள்ளார்.
இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 - 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் 4,34,000 ஆகும். அமேசான் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் 1,55,000.
நுகர்வோர் நலன் பாதுகாப்பதற்கு இந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு நேரடியான எந்த பதிலும் இல்லை. சட்டம் என்ன சொல்கிறது, எப்படி புகார்களை பதிவு செய்கிறோம் என்று மட்டும் அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளார். நீண்ட விளக்கத்தில் நுகர்வோர்களை தவிக்க விடும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் ஏதுமில்லை.
இப்படி நிலைமை இருந்தால் ஆண்டுக்காண்டு புகார்கள் அதிகரிக்கத்தானே செய்யும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.