india

img

பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

மார்ச் 28-29 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய 48 மணி நேர வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சம்மேளனங்கள்/ சங்கங்களின்  மேடையின் அறைகூவலுக்கு செவிமடுத்துக் கோடிக்கணக்கான தொழிலாளர் இவ்வேலைநிறுத்த போராட்டத்தை மகத்தான முறையில் வெற்றி பெற செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாராட்டுதல்களையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக்  கொள்கிறது.
வெளிவந்துள்ள தகவல்களின்படி, கேரளா முழுமையாக ஸ்தம்பித்தது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, கர்நாடகா, அஸ்ஸாம், திரிபுராவில் உள்ள தொழில் மையங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளில் வேலைநிறுத்தம் முழுமையாக வெற்றி  பெற்றிருப்பதைப் பார்த்தோம். போக்குவரத்து, மின்சாரம், மாநில அரசு ஊழியர்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள், திட்டப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் வெகுவாகக் கலந்து கொண்டுள்ளார்கள்.
வேலைநிறுத்தத்தின் வெற்றி, ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் தேச சொத்துகளை விற்றுப் பணமாக்கும் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் கொள்கை, லேபர் கோட் என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியிருத்தல், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தைப் பிரதிபலிக்கிறது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் முழுமையாக ஆதரித்துள்ளன.  
சில மாநிலங்களில் காவல்துறையினர் தானடித்த மூப்பாக நடந்துகொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அரசாங்கம், அடக்குமுறையைக் கைவிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி மடுத்திட வேண்டும். இந்தப் பொது வேலை நிறுத்தம், அரசாங்கம் பின்பற்றி வரும் தொழிலாளர் வர்க்க கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற கூடாது என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியிருக்கிறது.
(ந.நி.)