ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் பொதுமக்களிடம் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதியான உசேன் ஷா, பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப்பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முகாஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டம் துக்சான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லஷ்கர் இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட பயங்கரவாதிகள் பைசல் அகமது தார் மற்றும் தாலிப் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவர் புல்வாமாவை சேர்ந்த ஃபைசல் அகமது, இன்னொருவர் ரஜோரியை சேர்ந்த தலிப் உசேன் ஆகியோராவர். இவர்களில் தலிப் உசேன் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் பாஜகவில் நிறைய பேர் ஆன்லைன் மூலம் இணைகிறார்கள்.
மேலும் அவர்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், 7 கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஏடிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ரியாஸி மாவட்டம் துக்சான் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாராட்டுகள். ஆயுதங்கள் சுற்றித் திரிந்த இரு தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ரூ 2 லட்சம் சன்மானம் வழங்கப்படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார் என ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.