india

img

இணைய முடக்கத்தில் டிஜிட்டல் இந்தியா முதலிடம்..!

இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு இணைய முடக்கம் நடந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை சுமார் 639 இணைய முடக்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Centre - SFLC ) கூறுகிறது. மேலும் அந்த தரவுகளில், அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 399 முறை இணைய முடக்கம் நிகழ்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய முடக்கம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் தரவுகள் உள்ளதா என மக்களவையில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் இதுவரை இணைய முடக்கம் தொடர்பாக அரசிடம் எந்த தரவுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி இந்தியா சென்றாலும், அத்தகைய டிஜிட்டல் இந்தியாவுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய இணையம் முடக்கப்படுவது என்பது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் தன்னார்வ ஆலோசகர் ராதிகா ஜலானி கூறுகையில், இணையம் மற்றும் இணைய பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள் என்பது சமீபத்தில்தான் அதிக அளவில் நடைபெறுகிறது. இணையப் பயன்பாடு என்பது அடிப்படை மனித உரிமை என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த இணைய முடக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இணைய முடக்கம் என்பது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கான ஒரு கருவியாக இருக்கக் கூடாது. இணைய முடக்கம் ஏற்படுத்துவதற்கான பொதுவான காரணம் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவதைத் தடுப்பதற்கு என்கிறார்கள். ஆனால் இணையம் என்பது சமூக ஊடகங்களை விட மிக முக்கியமான ஒன்று. சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவதை தடுப்பதற்கு இணைய முடக்கம் ஒருவழியாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தொடர்ச்சியாக, இணைய முடக்கம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஆவணப்படுத்தி வருகிறது. நாங்கள் ஆவணப்படுத்திய தரவுகள் மூலம் இணைய முடக்கம் ஏற்படுவதால் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினை என்னவாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும் என ராதிகா ஜலானி தெரிவித்தார். 

இந்தியா உலக அளவில் அதிக அளவு இணைய முடக்கத்தைச் செயல்படுத்தியுள்ளதாக Accessnow.org அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி 34 நாடுகளில் இணைய முடக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், அதில் இந்தியாவில் மட்டும் 106 முறை இணைய முடக்கம் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 வரை நடைபெற்ற மிக நீண்ட இணைய முடக்கங்களில், 551 நாட்கள் ஜம்மு-காஷ்மீரில் இணைய முடக்கத்தின் மூலம் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.