வெங்காயத்தின் விலை மீண்டும் தாறுமாறாகஉயரத் துவங்கியுள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பெல்லாரி வெங்காயம் ரூ.90 வரை விற்கப்படுகிறது. இதுபொதுவான நிலவரம்தான். ஊருக்கு ஊர் போக்குவரத்துச் செலவையும் சேர்க்கும் போது வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் வெங்காய விலை உயர்வது என்பது தொடர்ந்துநடந்து வருகிறது. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கோ விவசாயிகள் இருப்பு வைப்பதற்கோ மத்தியஅரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஏதாவது ஒரு பொருளின் விலை ஏறினால் உடனடியாக மத்திய அரசு இறக்குமதி விதிகளை தளர்த்துவதை மட்டுமே தன்னுடைய தலையாயபணியாக செய்து வருகிறது. இப்போதும் வெங்காயஇறக்குமதியை அதிகரிக்க எகிப்து உள்ளிட்டநாடுகளை அணுகியுள்ளதாக மத்திய நுகர்வோர்விவகாரங்கள் துறை கூறியுள்ளது.
கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம்ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.வெங்காயத்தின் விலை மட்டுமின்றி அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்துஉயர்ந்து வருகிறது. வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை பெருமளவு உயர்ந்தாலும் பயிரிட்ட விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. மறுபுறத்தில் ராக்கெட் வேகத்தில் உயரும்அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இடைத்தரகர் மட்டுமே கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.
வெங்காயத்தை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடிப்பது என்பது நிரந்தரமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த பதுக்கலையும், விலை உயர்வையும் தடுக்க அரசிடம் எந்த உத்தியும் இல்லை. மாறாக பருவநிலை மீது பழிபோட்டு தப்பிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். தட்டுப்பாட்டின்போது பெருமளவு இறக்குமதி செய்யப்படும் போதும் முறைகேடும், கமிஷனும் கொடிகட்டிப் பறக்கிறது. மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பேஇந்த நிலை என்றால் அந்த சட்டம் வந்தபிறகு அவ்வப்போது ஏற்படும் வேளாண் பொருள் கட்டுப்பாடு என்பது நிரந்தரமான ஒன்றாக மாறிவிடும். விவசாயமும், விற்பனையும் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டால் விவசாயிகளும், நுகர்வோர்களும்ஒருசேர பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தை நிரந்தரமாக நிறுத்தி வைப்பது அவசியம். மறுபுறத்தில் இப்போது ஏற்பட்டுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை தடுக்கமத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.