headlines

img

அலட்சியத்தின் உச்சம்...

கொரோனா ஊரடங்கால்  உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்தத் தகவலும் மத்திய அரசிடம் இல்லை. அதனால் இழப்பீடோ, நிவாரணமோ வழங்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்று மத்திய தொழிலாளர்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா காலத்தில் மோடி அரசின்  திட்டமிடாத முழு ஊரடங்கு அறிவிப்பால் தொழிலாளர்களின் காலடி ரத்தத்தைத் தார்ச்சாலைகளும் கண்ணீராக வடித்தன. சாலையின் குறுக்கும், நெடுக்குமாய்ச்  சாரைசாரையாக  உழைக்கும் பெண்கள்பச்சிளம் குழந்தையுடன்  பரிதவித்தனர்.  லட்சோபலட்சம்  புலம் பெயர் தொழிலாளர்கள் நடுரோட்டில்அலைந்து திரிந்த  அவலத்தைக் கண்டு நாடேகண்ணீர் சிந்தியது. அப்போதெல்லாம்   ஏசி அறையில் அமர்ந்து  இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்குத் தொழிலாளர்களின் துயரம்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஒட்டுமொத்த மோடி அரசுக்கே தெரியாது என்றால், மக்கள் நலனில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்ட விபரங்கள் கூட எப்படி மறைந்து போகும்? மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு   ஊரடங்கு காலத்தில்இயக்கிய ரயில்களில் மட்டும் 80 பேர் உயிரிழந்தனர். அந்தப் பட்டியலை வெளியிட்டதே ரயில்வேபாதுகாப்பு படைதான்.  அதுவும் மே 1 முதல் 8 வரையிலான இறப்புகள் குறித்த புள்ளிவிபரங்களே இல்லை என மறைத்த பின்னரும், 80 பேரின்விபரத்தை வெளியிட்டது.  ரயில்வே பாதுகாப்புபடை யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது? எப்படி அந்தப் புள்ளி விபரம் தானாக மறையும்? 

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் விடிய விடிய நடந்த  களைப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்வே தண்டவாளத்தில் கண்ணயர்ந்தனர். அப்போது வந்த சரக்கு ரயில் அவர்கள்மீது ஏறியதில் 16 பேர் துடிதுடிக்க உயிரிழந்தனர்.இந்த சோகம் தேசத்தையே உலுக்கியது. அந்தஉயிர்கள் பறிபோன கணக்கு கூட இந்த அரசிடம்இல்லை என்றால், இது எப்படி உயிருள்ள அரசாகஇருக்க முடியும்?  ‘’ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்’’ போன்று மோடிகொரோனா கால நெருக்கடியிலும் கான மயிலோடு களியுவகை கொள்கிறார்.பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் படி முழு  ஊரடங்கு அறிவிக்கப்பட்டமார்ச் 25 முதல் மே 22 வரை மட்டும் 208 புலம்பெயர்தொழிலாளர்கள் சாலைகளில் இறந்திருக்கின்றனர். ஆனால் எந்தக் கணக்கும் எங்களிடம் இல்லை. அதனால் இழப்பீடோ, நிவாரணமோ வழங்க வில்லை என ஒரு அரசு சொல்கிறது என்றால்அந்த அரசு தொழிலாளர்களுக்கு எதிரான,ஈவிரக்கமற்ற நயவஞ்சக அரசாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இது அலட்சியத்தின் உச்சம் மட்டுமல்ல, அதிகாரத் திமிரும்கூட. பாசிச ஹிட்லரையே இந்தத்தொழிலாளிவர்க்கம்தான் முறியடித்தது என்பதை மோடிஅரசு நினைவில் கொள்ள வேண்டும்.

;