உ.பி., மாநிலம் உன்னாவ் நகரைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் மகள் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டார். இதற்கு நியாயம் கேட்டு சென்ற சுரேந்திரா சிங் பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல்சிங் ஆகியோரால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். உ.பி.மாநிலத்தை ஆளும் பாஜக அரசு இந்த அநீதியை கண்டு கொள்ள மறுத்தநிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டினால் குல்தீப்சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் செங்கார் மீதான குற்றச் சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கண்டறிந்த மத்திய புலனாய்வுத்துறை இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், உறவினரான ஒரு பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் ரேபரேலி நோக்கி சென்று கொண்டி ருந்தபோது அவர்களது கார் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அந்த பெண்ணின் தாயார் மற்றும் உறவுப் பெண் அதே இடத்தில் பலியாகி யுள்ளனர். இது ஒரு விபத்து என்ற கோணத்திலேயே மாநில போலீசார் அணுகுகின்றனர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக பாஜக எம்எல்ஏ திட்டமிட்டு இதை செய்திருக்க அனைத்து வாய்ப்புகளும் உண்டு. ஏனெனில் கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் தெரியாத அளவுக்கு கருப்புப் பெயிண்டால் அழிக்கப் பட்டுள்ளது. அவர்களுடன் வழக்கமாக செல்லும் பாதுகாவலர்களும் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கிறது. நீதியை நிலைகுலையச்செய்ய பாஜகவி னர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளை அவர்கள் அணுகிய விதமே சாட்சியாகும். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உ.பி. மாநில போலீசார் பாரபட்சமின்றி நியாயமாக விசாரிக்க வேண்டுமென்று தேசிய பெண்கள் ஆணையம் உ.பி. போலீசாருக்கு கடிதம் எழுதி யுள்ளது. பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கு விரைவாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டுமென்று மனித உரிமை ஆர்வ லர்கள் வலியுறுத்தியுள்ளனர். உ.பி., மாநிலத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுமாறு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை இந்துத்துவா கும்பல் தீ வைத்து கொளுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இந்த கொடூரங்கள் அச்சத்தை விதைப்பதாக உள்ளன. அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடாமல் இவற்றை தடுக்க முடியாது.