அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறை கேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும், அந்தக் குழு மத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ``ஹிண்டன்பர்க் வெளி யிட்ட ஆய்வறிக்கை அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக, அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் இரண்டே நாளில் ரூ.4.20 லட்சம் கோடியை இழந்ததோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி 7ஆவது இடத்திற்குச் சரிந்தார்.
அதானி குழுமம் மோசமான பங்கு கையாளு தல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக இந்திய மதிப்பில் 17.8 டிரில்லியன் (சுமார் 18 லட்சம் கோடி ரூபாய்) மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க நிறுவனம் திரட்டி யுள்ளது. அதானி குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் உட்பட முக்கியமான நபர்களிடம் பேசியது, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான ஆவணங்கள், ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் வழியாக இந்த மெகா மோசடி தெரிய வந்துள்ளது.
அதானி நிறுவனங்கள் கணிசமான கடனைப் பெற்றிருக்கின்றன. கடன்களுக்காக பங்கு களின் மதிப்பை உயர்த்தி அடகு வைத்துள்ள னர். அதானி குடும்ப உறுப்பினர்கள் மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற வரி மோசடிக்கு புகழ்பெற்ற நாடுகளில் போலி யான நிறுவனங்களை உருவாக்க ஒத்துழைத் துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கவுதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வர்த்தக இறக்குமதி ஏற்றுமதி திட்டத்தில் முறைகேடு செய்துள்ள தாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர். அதானியின் மைத்துனர் சமீர் வோரா, வைர வியாபார ஊழலின் தலைவன் என்பது பரவலாக அறியப்பட்டதுதான். பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு நெருக்கமாக இருப்ப தன் மூலம் அதானி பலனடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஹிண்டன்பர்க் அறிக்கை அமைந்துள்ளது.
அதானி குழுமத்தின் மோசடியால் பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் அரசுக்குச் சொந்தமான எல்ஐசி, எஸ்.பி.ஐ, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள் ளது. எல்ஐசி அதானி குழுமத்தில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அதில் 24,000 கோடி ரூபாயை இரண்டு நாட்களில் இழந்துள்ளது. மோசடி உறுதியானால் இந்த நிறுவனங்களில் தனது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக் கணக்கான இந்தியர்களின் எதிர்காலம் நாச மாகும். அதானி குழுமம் பெற்றுள்ள மொத்த கடனில் 40விழுக்காடு எஸ்.பி.ஐ வங்கியில் பெறப் பட்டது என்பதால் மக்களின் சேமிப்பு பாதுகாக்கப் பட வேண்டும். `ஹிண்டன் பர்க் அறிக்கை குறித்து விசாரிப்பதாக இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி அறிவித்துள்ளது. அரசும் தனது பங்கிற்கு நேர்மையாக விசாரித்து உண்மை களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.