headlines

img

கறையைப் போக்க முடியாது

இந்திய வரலாறை திருத்தி எழுத வேண்டு மென்று ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. ஒன்றிய ஆட்சி யில் அமர்ந்ததும் வாஜ்பாய் காலம் முதல் அதற்கான வேலைகளிலும் இறங்கத் துவங்கி னர். வரலாறை மட்டுமல்ல, சமூக, அறிவியல், பொருளாதாரத் துறைகளிலும் திருத்தி எழுத வேண்டுமென்று அவர்கள் கூறுவதன் பொருள் திரித்து எழுதுவதுதான். இப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்படிக் கூறுகிறார்.

நாட்டின் ஜனநாயகம்,மதச்சார்பின்மை போன்றவை அவர்களுக்கு எட்டிக்காயாகக் கசக்கின்றன. அதனால் அவற்றுக்கு அடிப்படை யான அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றி எழுத தொடர்ந்து முனைந்து வருகின்றனர். கடும் எதிர்ப்புக் கிளம்பும் போதெல்லாம் சிறிது காலம் கிடப்பில் போடுவர். பின்னர் தங்கள் வேலை யைத் துவங்குவர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை யில் இருக்கும் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றை நீக்கிட தொடர்ந்து முயற்சிக் கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த அரசியல் சட்டத்தையே மாற்றி மனுஸ்மிருதியை கொண்டு வரத் துடிக்கிறார்கள். 

அதன் தொடர்ச்சியாகத்தான் விடுதலை பவள விழவையொட்டி சுதந்திரப் போராட்டத்திற்கும் இவர்களது முன்னோர்களான, ஜனசங்கம், இந்துமகா சபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக் கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போ னால் விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்து, காட்டிக் கொடுத்து ஆங்கிலேயர்க ளுக்கு அடிபணிந்து அவர்களுக்கு சேவகம் செய்து வந்தார்கள். இப்போது வரலாறு முக்கியம் என்று  பேசுகிறார்கள்.

இவர்களது வழிகாட்டியான சாவர்க்கரை தான் இவர்களால் சொல்ல முடியும். ஆனால் அவரது வரலாறும் கறைபடிந்த வரலாறாக இருப்பதால் அதை மறைக்க, மறுக்கப்பட்டவர்க ளை ஆவணப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அந்தப் போர்வையில் தங்களது ஆட்களை பற்றி இட்டுக் கட்டி வரலாறு எழுத முயற்சிக் கிறார்கள். ஆனால் உண்மை வரலாறு ஒரு போதும் மாறாது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போராட்டம் நடந்தபோது சமஸ்தானங்களாக இருந்த பகுதிகளில் மன்னர்கள், திவான்கள் எல்லாம் மக்களை ஒடுக்கி பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தவர்களே, அவர்களை ஆத ரித்தவர்களே இந்துமகா சபை, ஆர்எஸ்எஸ் காரர்கள். ஆனால் இப்போது திருத்தி எழுத வேண்டுமென்பது உண்மையல்லாதவற்றை திரித்து எழுதுவதற்கான ஏற்பாடேயாகும்.

சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை கௌரவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். துரோகம் செய்த வர்கள் தியாகிகளை கௌரவிக்கப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தில்லையா? அவரது பேச்சு விடுதலைக்காக உடல், பொருள், ஆவியை இழந்தவர்களின்  தியாகத்துக்கு இழுக்காகும்.