headlines

img

உள்நோக்கம் கொண்ட மோடியின் பாசாங்கு வார்த்தைகள்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தனது கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இடையே பேசியிருக்கும் பிரதமர் மோடி, நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறியிருக்கிறார்.

பொது சிவில் சட்டத்தின் தேவை குறித்து, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவருக்கு தனித்தனி சட்டம் இருந்தால், அந்த குடும்பம் செயல்பட முடியுமா? அத்தகைய இரட்டை முறையில் ஒரு நாடு இயங்க முடியுமா? என்றும் கேட்டிருக்கிறார். பொது சிவில் சட்டத்திற்கான மோடியின் இந்த ஒப்பீடு நியாயமானது போல் தோன்றினாலும், உண்மையில் உள்நோக்கம் கொண்டது. 

இந்திய தண்டனை சட்டத்தை பொறுத்த வரை நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது. சிவில் சட்டத்தை பொறுத்தவரை பன்மைத் தன்மை கொண்ட நம் நாட்டில் வேறுபாடுகள் உள்ளன. திருமணம், விவாக ரத்து, சொத்து பகிர்வு உள்ளிட்ட சிவில் பிரச்சனைகளில் பொதுச் சட்டத்தை ஏற்படுத்து வது என்பது அனைத்து தரப்பினரின் இசைவைப் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டியதாகும். ஆனால் மோடி இப்போது சொல்லி இருப்பது,  அனைவரின் இசைவைப் பெறும் நோக்கம் கொண்டதல்ல. பன்மைத் தன்மையைத் தகர்த்து ஒற்றைத் தன்மையை ஏற்படுத்த முயலும் இந்துத்துவ பாசிச நோக்கம் கொண்டது.

அண்மையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. நாடு முழுவதும் 19 எதிர்க்கட்சிகள் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்டு செயல்பட முனைந்துள்ளனர். அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடை பெற உள்ளன.

இந்த அரசியல் பின்னணியில், மோடி பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசியிருப்பது, இந்துத்துவா மதவெறி அடிப்படையில் பெரும் பான்மை வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற பிளவு நோக்கம் கொண்டதாகும்.

பாஜக முன்வைத்த மூன்று பிரதான முழக்கங்களில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்வது ஆகியவற்றோடு பொது சிவில் சட்டம் என்பதும் ஒன்று. அதில் இரண்டை ஏற்கனவே செய்து முடித்திருக்கும் பாஜக அரசு இப்போது மூன்றாவது முழக்கத்தை கையில் எடுத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பேராபத்தாக திகழும் பாஜகவின் இந்த குறுகிய உள்நோக்கம் கொண்ட, பாசாங்கு வார்த்தை களை இந்திய மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.