headlines

img

நிமிர்ந்து நிற்போம்!

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க குஜராத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்தது வரவேற்கத் தக்கது.

பள்ளிகளின் திறன் மற்றும் தேசிய டிஜிட்டல் கல்வி, தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் உள்ளிட்ட டிஜிட்டல் முன் முயற்சிகளை மையமா கக் கொண்டு கல்விச்சூழலை வலுப்படுத்துவது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் இந்த மாநாடு நடை பெற்று முடிந்துள்ளது.

புதிய தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கென தனி கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. எனினும் புதிய கல்விக் கொள் கையை புகுத்துவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கா மல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புறக் கணித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு என்பதோடு மட்டுமல்லாமல் மாநில அரசு களின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் எதேச்சதிகாரமாக நடந்து வரும் ஒன்றிய அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பாகவும் இது அமைந்துள்ளது.

மறுபுறத்தில் ஆளுநர்களை கொண்டு துணை வேந்தர்கள் மாநாடுகளை நடத்தி தேசியக் கல்விக்கொள்கையை பல்கலைக்கழ கங்களில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் கூட்டாட்சி தத்துவத் திற்கு குழிபறிப்பது ஆகும். ஆளுநர் பதவியை தவறாக பயன்படுத்தும் முயற்சியும் ஆகும்.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசு அடுத்தடுத்து அனைத்துப் படிப்புகளுக்கும் தேசிய அளவி லான நுழைவுத் தேர்வை புகுத்துகிறது. முதல் கட்ட மாக மத்திய அளவிலான பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு துவங்கி தேசிய அளவிலான தேர்வு என்று கூறி மாணவர்களை அச்சுறுத்தி கல்வி நிலையங்களை விட்டு விரட்டவே புதியக் கல்விக்கொள்கை வகை செய்கிறது. மேலும் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்புக்கு ஆதரவா கவே புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் மேலாக தற்போது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மொத்தமாக மாநிலங்களிடமிருந்து பறித்து துவக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒன்றிய அரசின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளவே புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதை முன்னு ணர்ந்து தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு எழும் நிலையில் மாநில அரசு எடுத்துள்ள முடிவு தமிழக மக்களின் முடிவாகவே அமைந் துள்ளது.