headlines

img

சொல்வது வேறு செய்வது வேறு

தாய்மொழியில் சட்டப்படிப்பை கற்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாநில  சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.  மேலோட்டமாகப் பார்த்தால் இது வரவேற்கத் தக்க ஒன்றே. அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் அவரவர் தாய்மொழியில் சட்டம் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளையும் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

ஆனால் இளநிலை மருத்துவப் படிப்புக்கான புத்தகங்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துப் படிப்புகளும் அவரவர் தாய்மொழி யில் படிக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவது உண்மையானால் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மருத்துவ நூல்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டாமா?

அண்மையில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள பரிந்துரை யில் ஒன்றிய அரசு நடத்தும் உயர்கல்வி நிலையங்களில் இந்தி மட்டுமே பயிற்றுமொழி யாக இருக்கும் என்றும் ஆங்கிலம் விருப்ப மொழியாக இருக்கும் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதுதான்  தாய்மொழிவழிக் கல்வியை வளர்க்கும் லட்சணமா?

நீதித்துறையில் தாமதமாக நீதி வழங்கப் படும் விவகாரம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி ஆதங்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்னமும் விசாரணைக்கு கூட எடுக்கப்படவில்லை. ஒன்றிய அரசின்  பண  மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து தொட ரப்பட்ட வழக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் விசாரணைக்கே வந்திருக்கிறது. 

ஒன்றிய அரசு விரும்பும் வழக்குகளில் உட னடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகள் முடக்கப்படுகின்றன. குஜராத் கலவர வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு போன்றவை ஒரேயடியாக தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதில் ஒன்றிய அரசின் தலையீடு இல்லை என்று பிரதமர் மோடியால் கூற முடியுமா? நீதித்துறையிலும் கூட இவர்களது ஊடுருவல் மிக மோசமாக உள்ளது. 

தம்முடைய அரசு பல காலனியாதிக்கக் கால சட்டங்களை கைவிட்டுவிட்டதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பிரிட்டிஷ் காலத்தில் போரா டிய மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட கொடிய சட்டங்களை இப்போதும் உயிரோடு வைத்திருந்து மனிதஉரிமைக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் போராடுபவர்களை வதைக்கிறது மோடி அரசு. அடக்குமுறை சட்டங்களை தொடர்வது ஏன் என உச்சநீதி மன்றமே கேள்வி எழுப்பியது. 

சட்டக்கல்வி மட்டுமின்றி அனைத்து உயர்கல்வியும் அவரவர் தாய்மொழியில் கிடைப்பதே நல்லது. ஆனால் இந்தி மற்றும்  சமஸ்கிருத திணிப்பில் வெறித்தனமாக ஈடு பட்டுள்ள ஓர் அரசினால் அதை நிறைவேற்ற முடியாது.