headlines

img

கர்நாடக ‘சங்கீத’ கச்சேரி அருமை

கர்நாடகத்தில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்து அந்த மாநிலத்தையே மதவெறிக் காடாக மாற்ற முயன்ற பாஜகவுக்கு தீர்மானகரமான தோல்வியை பரிசளித்துள்ள கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்கள். 2024 மக்கள வைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு முன்னுரையாக கர்நாடகத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

கர்நாடகத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டதன் மூலம் தென்னிந்தியாவில் அந்தக் கட்சியின் ஆட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது. 135 இடங்களை பெற்று அமோக வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது. குதிரை பேரத்திற்கு இடமளிக்காமல் காங்கிர சுக்கு தெளிவான பெரும்பான்மையை கர்நாடக மக்கள் அளித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாட்டின் அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு கர்நாடகத்தையே சுற்றி சுற்றி வந்தனர். ஏராளமான திட்டங்களை பிரதமர் அறிவித்தார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டோம் என்று கொக்கரித்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

கர்நாடக அரசு இஸ்லாமியர்களுக்கான  4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து அதை  இரு பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. எனினும் இதை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய அமித்ஷாவை உச்சநீதிமன்றம் பகிரங்கமாக கண்டித்தது.

கர்நாடக இஸ்லாமிய பெண் குழந்தை களின் படிப்பை கெடுப்பதற்காகவே ஹிஜாப் பிரச்சனையை எழுப்பியது பாஜக அரசு. திப்புசுல்தான் உள்ளிட்ட மாவீரர்களை இழிவு படுத்தியது மதவெறி பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டது. இதை கர்நாடக மக்கள் ஏற்கவில்லை என்பதையே தேர்தல் முடிவு உணர்த்துகிறது. 

கர்நாடக பாஜக ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடியது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் 40சதவீத கமிசன் என்பது அறிவிக்கப்படாத விதியாயிற்று. காங்கிரஸ் கட்சி, பாஜகவின் ஊழலை பிரதானமாக கையிலெடுத்து பிரச்சாரம் மேற்கொண்டது. ஒருவகையில் கர்நாடகத் தேர்தல் முடிவு வெறுப்பு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துள்ளது. 14 அமைச்சர்கள் மண்ணைக் கவ்வியுள்ளதன் மூலம் எந்தள வுக்கு பாஜக ஆட்சியை மக்கள் வெறுத்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் முனைப்பாக செயல்பட்டால் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட  முடியும் என்ற நம்பிக்கையை உறுதி செய்வதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.