headlines

img

இலவச மின்சாரத்திற்கு ஆபத்து

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள மின்சார  சட்டத்திருத்த மசோதா இந்தியாவை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். இதை  எதிர்த்து பெரும் கிளர்ச்சிக்கு நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது மின்ஊழியர்கள் தொடர்புடைய பிரச்சனை மட்டுமல்ல,  ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கக் கூடிய மிக மோசமான முடிவாகும்.  இதை எதிர்த்து அனைத்து இந்திய குடிமக்களும் தெருவில் இறங்கி போராட வேண்டியது அவசியமாகும்.

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு பொதுத் துறைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. அடுத்த இடியாக பாரத் பெட்ரோலியம், இஸ்ரோ,  ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு போன்ற துறைகளை தனியாருக்கு தந்து வருவது போல மாநில அரசுகளிடம் உள்ள மின்விநியோகம் முழுவதையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. 

மின்சாரச் சட்டம் 2003ல் பல முக்கிய திருத்தங்களைச் செய்து புதிய சட்ட முன்வரை வை 2020 ஏப்ரல் 17ந்தேதி கருத்துக்கேட்புக்கு என்று கூறி ஒன்றிய அரசு வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று மக்கள் சிக்கித் தவித்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நயவஞ்சக வேளையில் ஈடுபட்டது.

இப்போது கருத்துக்கேட்பு முடித்துவிட்டதாகக் கூறி, மின்வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள் ளது. இந்த மசோதாவின்படி மாநில மின்வாரியங்களுக்குப் பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உரு வாக்கப்பட்டு மின்விநியோகத்தை மாநில அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. 

இதனால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றாலும் மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் அதோ கதியாகும்.

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒட்டுமொத்த மின் இணைப்பில் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்திற்கும், 11 லட்சம் மின் இணைப்புகள் குடிசை வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே போல விசைத்தறி தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின்படி இலவச மின்சாரம் முற்றாக தடைசெய்யப்படும். மின்விநியோகத்தில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இருக்காது. மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட மின்சார கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்துவிட்டது ஒன்றிய அரசு. தொலைத்தொடர்புத் துறை  போல இனி மின்சாரத் துறையும் மக்களை சுரண்டும் துறையாக முற்றாக மாற்றப்பட்டுவிடும். இந்த சட்ட முன்வரைவை கிழித்தெறிய வேண்டும் என நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். 

;