2014 தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று கூறப்பட்டி ருந்தது. மோடி ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டு கள் முடிவடைந்திருக்கிறது. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் 16 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் பல லட்சம் பேருக்கு இருந்த வேலையும் பறிபோனதுதான் கண்ட பலன்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காத மோடி அரசு 2024 தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் தனது ‘வேலையை’ காட்டத் துவங்கி யுள்ளது. இவரது ஆட்சியில் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ தகவல் தெரிவித்தது.
கொரோனா காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சக்கட்டத்திற்கு சென்றது. சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் மூடுவிழா கண்டதால் பல கோடி பேர் வேலையிலிருந்து வீதிக்கு துரத்தப்பட்டனர். கொரோனா நெருக்க டியை பயன்படுத்திக் கொண்டு பெரு முதலாளி களுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளுபடி என வாரி வழங்கிய மோடி அரசு வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
ஆனால் இப்போது 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தை துவக்கியுள்ள தாகவும், 2023 இறுதிக்குள் இந்த பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது அடுத்தாண்டு தீபாவ ளிக்கு பரிசாக அமையும் என்று பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர். பல கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கும் போது இவர்கள் கூறுவது போல பத்து லட்சம் பேருக்கு வேலை அளித்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரியாகவே அமையும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கான நிதியை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் குறைத்துக் கொண்டே வரு கிறது மோடி அரசு. இந்தத் திட்டத்தையே நிறுத்தி விட சதி நடக்கிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் 7 கோடிப் பேர் பலனடைந்து வருவதாக மோடி கூறுகிறார். ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை நாட்களையும், கூலியையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மோடி அரசி னால் ஏற்கப்படவில்லை.
மறுபுறத்தில் இலவசங்களால் வரி செலுத்து வோர் வேதனைப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு வழங்குகிற விழா என்று கூறிவிட்டு, இலவசங்களே கூடாது என்பது முரண்பாடு இல்லையா? மாநில அரசு கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள், இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச மின்சாரம் போன்றவைதான் இவரது கண்ணை உறுத்து கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு வழங்கு வது மட்டும்தான் இலவசம் போலும். முதலாளி களுக்கு இவர்கள் அளிப்பது அதில் சேராது போலும்.