காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடி யிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாகக் கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளைக் கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்த நிலையில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளைக் கட்டிய விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து ஆட்சி யர் உத்தரவிட்டுள்ளார். கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்க ளுக்காகக் கட்டப்படும் குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வுசெய்யவேண்டும். இதன் மூலம் தரமற்ற கட்டிடங்கள் கட்டப்படுவதை ஆரம்பத்திலேயே தடுக்கமுடியும்.
நலிந்த பிரிவினருக்கான வீடுதானே அவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று கருதிக்கொண்டு தரமற்ற முறையில் கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்ச ரிக்கை விடும் வகையில் அரசின் நடவடிக்கை கள் இருக்கவேண்டும். தரமற்ற கட்டுமானம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை-ஓசூர் சாலை ஓரமாக 300க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப் பட்ட தொகுப்பு வீடுகளின் கூரையில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. இடிந்து விழும் நிலையில் அந்த குடியிருப்புகள் உள்ளதால் உயிருக்குப் பயந்து இருளர்கள் அப்பகுதியிலே சிறிய, சிறிய குடிசை போட்டு அதில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த கால அதிமுக ஆட்சி யில் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து ஊழல் மயமாகியிருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் கட்டப்பட்ட நகர்ப்புறவாழ்விட மேம் பாட்டு வாரிய குடியிருப்புகளும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன. சென்னை புளியந்தோப்பு கே.பி. பூங்காவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் சுவரைத் தொட்டாலே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.
எனவே கடந்த கால ஆட்சியின் தவறுகள் தற்போதைய ஆட்சியிலும் தொடராமல் இருக்க உரிய கண்காணிப்பும் தொடர் நடவடிக்கையும் அவசியம். தவறிழைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சியமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.