headlines

img

‘31 பைசா’ அரசு!

குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ்  வழங்க மறுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. 

அகமதாபாத் அருகேயுள்ள கோராஜ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாம்ஜிபாய். இவரிடம் இருந்து ராகேஷ் வர்மா, மனோஜ் வர்மா ஆகியோர் நிலம் வாங்கியுள்ளனர். அதே  நேரத்தில், பாஷாபாயின் குடும்பம் எஸ்பிஐ-யில் பயிர்க்கடன் வாங்கியிருந்தது. பாஷாபாயின் குடும்பத்தினர் கடனை அடைப்பதற்கு முன்பே  நிலத்தை விற்றனர். அதே நேரத்தில்,  நிலத்தின் மீது கடன் பாக்கியிருந்தது. இதனால் நிலத்தை ராகேஷ் வர்மா, மனோஜ் வர்மா பெயரில் வருவாய் பதிவேடுகளில் பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து சாம்ஜிபாய் தாம் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட்டார். இதன் பின்னரும் நிலத்தை விற்க வங்கி தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை.

இதுதொடர்பான வழக்கில், எஸ்பிஐ தரப்பு வழக்கறிஞர், அந்த விவசாயி மேலும் 31 பைசா  கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனையும் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே கணினி முறையில் பராமரிக்கப்படும் கடன் பிணையில் இருந்து அவா் விடுபட முடியும் என்றும் அந்த நபா்  கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டார் என்று வங்கி மேலாளா் வாய்மொழியாகக் கூற முடியுமே தவிர, தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதி, ‘50 பைசாவுக்குக் கீழான கடன் பாக்கியை கணக்கில்  எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கடன் வாங்கியவர் ஏற்கெனவே தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்ட பிறகு, அவரின் நில  விற்பனைக்குத் தடையில்லா சான்று வழங்காமல் இருப்பது தவறு. வெறும் 31 பைசா கடன் பாக்கிக் காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் தவறான செயல். கடன் வாங்கி திருப்பிச் செலுத்திய பிறகு ஏன் அந்த நபரை துன்புறுத்தி வருகிறீர்கள்? அடுத்த முறை வழக்கு விசாரிக்கப்படும்போது வங்கி மேலாளா் நேரில் ஆஜராக வேண்டும்’ என்றார். இந்த வழக்கு மே 2(இன்று) விசாரிக்கப்பட உள்ளது.

நாட்டில் உள்ள வங்கிகளில் விவசாயிகள், பொதுமக்களின் பணம், ரூ.101 லட்சம் கோடி உள்ளது. பொதுத் துறை வங்கிகளில், தொழில் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவ தால், பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வராக்கடன் மட்டும், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடன் வாங்கியவர்கள் பொதுமக்களோ, விவசாயிகளோ அல்ல; கார்ப்பரேட் முதலாளிகள் தான். அவர்கள் வாங்கிய கடனை, வாராக்கடனாக அறிவித்து விட்டது மோடி அரசு.

பொதுத்துறை வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கியுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி,  மொகுல் சோக்சி போன்றவர்களை பாஜக ஆட்சியாளர்களே வெளிநாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டனர். 

அம்பானி, அதானி குழுமங்கள் உட்பட இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளி கள் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். ஆனால் எளிய விவசாயிகளைப் பந்தாடுகிறது ‘31 பைசா’ மோடி அரசு.