நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு குஜராத் தில் நடந்த சிறுபான்மை முஸ்லிம் மக்கள் படு கொலையில் அன்றைய குஜராத் முதல்வரும், இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி மற்றும் அன்றைய மாநில உள்துறை அமைச்சர், இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு உள்ள நேரடி யான தொடர்பு குறித்த பிபிசி நிறுவனத்தின் ஆவ ணப் படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான கார்ப்பரேட் முதலாளி கௌதம் அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து முறையான விவாதம் நடத்த ஒன்றிய பாஜக அரசு தயாராகயில்லை. அதானியின் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டுமென்று கூட்டத் தொடரின் முதல் நாள் துவங்கி இறுதி நாள் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தின. இதற்கு ஆளுங்கட்சி அனுமதி மறுத்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
பிரதமர் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்திற்கான தன்னுடைய பதிவுரையில் அதானியின் பெயரைக்கூட குறிப்பிடாமல் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு பதிலளிக்காமல் சம்பந்தமில்லாமல் ராகுல்காந்தி குடும்பத்தினர் ஏன் நேரு பெயரை வைத்துக் கொள்ளவில்லை என்று வெட்டி விவாதத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசு மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பேச்சின் சில பகுதிகளை அவைக்குறிப்பிலி ருந்தே நீக்கியுள்ளனர். பல எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் பேசுவதற்கே வாய்ப்பளிக்கப்படவில்லை. இவ்வாறாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கி வருகிறது மோடி அரசு.
அதானி மோசடி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணைக் குழு அமைக்கப் போவதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தக்குழு கூட பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஸ்திரப் படுத்துவது குறித்தே அன்றி அதானியின் மோசடி குறித்து அல்ல. அதானி நிறுவனத்தின் பங்குகளை எல்ஐசி, ஸ்டேட் வங்கி போன்ற பொ துத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள நிலையில், இது இந்திய மக்களின் சேமிப்பு தொடர்புடைய ஒன்றாக மாறியுள்ளது.
அதானியை காப்பாற்றுவதற்காகவே நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மோடி அரசு உடன்பட மறுக்கிறது. ஆனால் மக்கள் மன்றத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே ஆக வேண்டும்.