ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் டாக்டர் மசூத் பெஜேஸ்கியான் தீர்மானகரமான வெற்றி யைப் பெற்றிருக்கிறார். சீர்திருத்தவாதியான இவரது வெற்றியும், இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலி யின் தோல்வியும் ஈரான் அரசியலில் மட்டு மல்ல, அரபு பிரதேசத்தின் அரசியலுக்கும் உலக அரசியலுக்கும் ஒரு முக்கிய சமிக்ஞை ஆகும்.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடு களான பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடு களில் அதிதீவிர வலதுசாரிகள், சமீபத்திய ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்த லிலும், தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலிலும் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், நீண்ட காலமாக அதிதீவிர மதப்பழமைவாதம் கோலோச்சிக் கொண்டிருந்த அரபு நாடுகளில் ஒன்றான ஈரானில் மதப்பழமைவாதத்திற்கு எதிரான சீர்திருத்தவாதி ஒருவருக்கு 50சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து ஜனாதிபதியாகத் தேர்வு செய்தி ருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அரபு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் சிம்மசொப்பனமாக திகழ்கிற நாடு ஈரான். அணுசக்தி பிரச்சனை உள்பட அமெரிக்காவின் பல்வேறு நகர்வுகளில் சர்வதேச அரசியல் அரங்கிலும், ராஜீய ரீதியிலும் ஏகாதி பத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுத்த நாடு ஈரான். அரபு பிரதேசத்தில் அமெரிக்கா அரங்கேற்றி வரும் போர்கள், தாக்குதல்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எதிராக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கரம்கோர்த்து, நுட்பமான முறையில் அமெரிக்கா வுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறது.
ஆனால் அதேவேளையில், உள்நாட்டில் ஈரான் ஆட்சியாளர்கள், மதப்பழமைவாதத்தை தொடர்ந்து உயர்த்திப்பிடித்து வருகிறார்கள். சமீப காலத்தில், ஹிஜாப் அணியாத பெண்களுக்கு பகிரங்கமாகக் கடும் தண்டனை அளித்தது உள்ளிட்ட அதீதிவிர பிற்போக்குவாத நட வடிக்கைகளை, மதப்பழமைவாதிகளுக்கு இணங்கி ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். ஆனால் அதற்கு எதிராக ஈரான் பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் மிகப் பெரும் போராட்டங்களை நடத்தினர். அத்தகைய போராட்டங்களை ஆட்சியாளர்கள் கடுமையாக ஒடுக்கினர். இது உள்பட, பழமைவாத ஆட்சி யாளர்களின் நடவடிக்கைகளுக்கும்; நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கும் எதிராக ஈரான் மக்களிடையே கனன்று கொண்டி ருந்த எதிர்ப்புணர்வுதான் தற்போதைய தேர்தலில் மிகவும் வலுவாக வெளிப்பட்டுள்ளது. இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல, சீர்திருத்தவாதி மசூத் பெஜேஸ்கியானைத் தேர்வு செய்துள்ளனர். ஹிஜாப் உள்பட எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட அவரது கருத்துக்கள் வென்றுள்ளன.