headlines

img

அவகாசமும் ஆயாசமும்

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இதன் அடிப்ப டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் உறுதி அளிப்பது இது முதன் முறையல்ல. ஏற்கெனவே இதேபோல பலமுறை வாக்குறுதி அளித்து இதை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளான ‘பெருமை‘ தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.  உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென திமுக மற்றும் பொது நல அமைப்புகள் தொடுத்த வழக்கில் தமிழகத்தில் கடு மையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது என்றும் அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் தமிழக தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தற்போது அக்டோபர் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்துவதாக கூறியுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் உள்ளாட்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் சார்பில் தர வேண்டிய நிதியை விடு விக்க முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பழங்குடி மக்க ளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையே காரணம் காட்டி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுத்து வந்தது. 

வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட பிறகும் புதிய புதிய காரணங்களை கண்டுபிடித்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதிலேயே அதிமுக அரசு குறியாக இருந்தது. வார்டு வரையறை செய்யப்பட வில்லை. வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு காரணத்தை  கூறி அவகாசம் கேட்பது தமிழக தேர்தல் ஆணை யத்தின் வழக்கமாக இருந்தது.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாததால் ஜனநாயகம் அவ மதிக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் கொடி கட்டிப்பறக்கிறது. இதை பயன் படுத்தி ஆளும் கட்சியான அதிமுக கொள்ளை யடிக்கிறது. உள்ளாட்சி பணிகளில் ஊழல் இல்லாத பணியே இல்லை என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மறுபுறத்தில் மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூறுவது என தெரியாமல் திகைக்கி றார்கள். இனியாவது அவகாசம் கேட்காமல், கார ணங்களை கண்டுபிடிக்காமல் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையமும் மாநில அரசும் முன்வர வேண்டும்.

;