headlines

img

ஏர் உழவர்கள் ஏற்றம் பெற...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசு இரண்டாவது முறையாக  வேளாண் நிதிநிலை அறிக்கையை சனியன்று  தாக்கல் செய்தது. இந்த நிதிநிலை அறிக்கை  பல்வேறு புதிய திட்டங்களையும், அறிவிப்புகளை யும் கொண்டிருக்கிறது. இவை வரவேற்கத்தக்க நிகழ்வுகளாக அமைந்திருந்தாலும், சில முக்கிய மான கோரிக்கையாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தவை பற்றி நிதிநிலை அறிக்கையில் கூறப் படாதது வருத்தத்திற்குரியதாக உள்ளது.  

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த  வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதுபோல், உழவர் தம் உள்ளத்தையும் வறியோர்  வயிற்றில் உள்ள பள்ளத்தையும் நிரப்ப வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறி யிருப்பது முற்றிலும் சரியாக ஆவதற்கு இன்னும்  சில அறிவிப்புகளும் வந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மின்சார  திருத்தச் சட்டத்தினால் ஆபத்திற்குள்ளான இலவச மின்சாரம் தமிழக அரசால் 5,157 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு விவசாயி களின் வயிற்றில் பால்வார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இளம் பட்டதாரிகள் தொழில் வழங்க ரூ.1லட்சம் வழங்குதல் போன்ற புதிய திட்டங்களும், பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20சதவீத மானியம் வழங்குதலும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. 

ஆனாலும் தேர்தல் காலத்து வாக்குறுதியான கரும்பு விவசாயிகளின் கோரிக்கையான டன்னு க்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. அத்துடன் கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்குவதும் கூட  மிகச்சிறிய உயர்வே ஆகும். அத்துடன் அவர்களது கரும்புகளை அரவை செய்யும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை உள்ளிட்ட மூடிக்கிடக்கும் ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது கவனிக்கப்படாமல் விடுபட்டுள்ளது. 

காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கால்வாய்களை தூர்வாரும் பணிக்காக ரூ.80 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது போதுமானதல்ல. ஆயினும் நெல் விவசாயிகளுக்காக உலர் களங்கள்  அமைப்பது தார்ப்பாய் வழங்குவது ஆகியவை  வரவேற்கத்தக்கது என்றாலும் கூட கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்கப்ப தற்காக கிடங்குகள் அமைப்பது குறித்து அறிவிக்கப் படாதது வருத்தத்திற்குரியதாகவே உள்ளது.

மேலும் மிக முக்கியமான கோரிக்கையான குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதி இந்த வேளாண் நிதி நிலை  அறிக்கையில் இடம்பெறாதது விவசாயிகளை வாட்டத்தை தீர்க்காது, வறுமையைப் போக்காது.  அதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கை யின் பதிலுரையின்போது வேளாண் அமைச்சரும் தமிழக முதல்வரும் கவனத்தில்கொண்டு நிறைவேற்றும் முடிவை அறிவிப்பார்களே யானால் விவசாயிகள் உண்மையிலேயே மகிழ்ச்சி யில் திளைப்பார்கள். தமிழகத்தின் நிதிநிலைமை பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறி விவசாயி களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளா மல் அதை நிறைவேற்றுவதற்குரிய  வழிவகைகளை காண்பதே நல் அரசின் அடையாளம் ஆகும்.