headlines

img

எளிய வழியில் இலக்கணம்-3 - கோவி.பால.முருகு

சென்ற பாடத்தில் குறில் நெடில் அறிந்து அவைகளைப் பிரித்தோம்.அதற்கு அலகிடுதல் அதாவது அசை பிரித்தல் என்று பெயர்.அசைகள் நேர்,நிரை என்று இருவகைப்படும். இன்றைய பாடத்தில் வாய்பாடு கூறுதலைப் படிக்கப் போகிறோம்.எனவே, முன்பு பிரித்த அதே குறட்பாவை எழுதுகிறேன். அக/ர-முத/ல-எழுத்/தெல்/லாம் ஆ/தி பக/வன் முதற்/றே உலகு இப்போது நான் கேட்பதற்கு விடையளியுங்கள். கோட்டிற்கு உள்ளே எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதைப் பார்ப்போம். "அக" என்பதில் எத்தனை எழுத்துகள் உள்ளன? "இரண்டு எழுத்துகள் ஐயா" சரி...இப்போது இரண்டு எழுத்துகள் இருந்தால் "நிரை" என்று எழுதிக்கொள்வோம்."நிரை" என்பதில் எத்தனை எழுத்துகள் உள்ளன? "இரண்டு ஐயா"அதனால்தான் இரண்டு எழுத்துகள் உள்ள அசைக்கு நிரை என்று எழுதவேண்டும்.அடுத்து "ர" என்ற எழுத்துமட்டும் உள்ளது.எனவே ஓரெழுத்து வந்தால் அதை"நேர்" என்று எழுதவேண்டும். நேர் என்பதில் எத்தனை எழுத்துகள் இருக்கின்றன.”இரண்டு எழுத்துகள் ஐயா”தவறு மீண்டும் இந்தப் பிழையைச் செய்கிறீர்களே! புள்ளி எழுத்தைத்தான் ஜோக்கர் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? எனவே, அதைக் கணக்கில் கொள்ளாமல் ஒரெழுத்து என்றே கொள்ளவேண்டும்.ஒரெழுத்து வந்தால் அதை நேர் என்று எழுதிக்கொள்வோம். நேர் என்பதில் ஒரெழுத்துதானே இருக்கிறது என்பதால். நேர்,நிரை என்பன அசைகள்.ஓரெழுத்து இருந்தால் ஓரசை.இரண்டு எழுத்துகள் வந்தால் அது ஈரசை.இவற்றை நன்றாக நினைவில் கொண்டால் பிழையின்றி அழகாக எழுதிவிடலாம்.

இப்போது அடுத்தடுத்து உள்ள சீர்களைப் பாருங்கள்.முத/ல-நிரை நேர், எழுத்/தெல்/லாம்-நிரை நேர் நேர்.இவ்விடத்தில் ஒன்றை மீண்டும் நினைவூட்டுகிறேன்.அதாவது,புள்ளி எழுத்து ஜோக்கர் அதைக் கணக்கில் கொள்ளக்கூடாது அல்லவா? "ஆமாம்.ஐயா" அதனால் எழுத்/தெல்/லாம் என்பதில் புள்ளியைச் சேர்க்காமல் கணக்கிட்டால் .இரண்டெழுத்துகள்,ஓரெழுத்து,ஓரெழுத்து என்று வரும்.அப்படியானால் நான் முன்பு சொன்னதைப் போல நிரை நேர் நேர் என்று எழுதவேண்டும்.

இப்படியே தொடர்ந்து எல்லா சீருக்கும் எழுதினால் கீழே உள்ளதுபோல வரும்.
அக/ர- நிரை நேர்
முத/ல-நிரை நேர்
எழுத்/தெல்/லாம்- நிரை நேர் நேர்
ஆ/தி- நேர் நேர்
பக/வன்- நிரை நேர்
முதற்/றே- நிரை நேர்
உலகு-  நிரைபு
 

இதில் கடைசி சீரான உலகு என்பதை மட்டும் நிரைபு என்று குறிப்பிட்டுள்ளேன். 'உல" என்பது நிரை அதோடு "பு" என்ற எழுத்தைச் சேர்த்து "நிரைபு" என்று எழுதவேண்டும். எடுத்துக்காட்டாக சில குறட்பாக்கள் 

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா  தார்"
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல்  தலை”
“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று”
“ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”
 

என்ற குறட்பாக்களில் கடைசிச் சீர்கள் தார்-தலை-நன்று-பொதிந்து என வந்திருக்கின்றன. இதில் தார் என்பதில் ஒரு எழுத்துதான் உள்ளது.யாரோ ஒரு மாணவன் இரண்டு என்று சொல்கிறான் பார்.நான் பலமுறை சொன்னதுபோல புள்ளியெழுத்தைக் கணக்கில் கொள்ளக்கூடாது.எனவே,அது ஓரெழுத்துதான்.எனவே அதை நேர் எனப்பிரித்து நாள் என வாய்பாடு கூறவேண்டும்.அடுத்த குறளில் தலை என வந்திருக்கிறது அதில் இரண்டு எழுத்துகள் எனவே நிரை எனக் கொண்டு மலர் என வாய்பாடு கூறவேண்டும்.அடுத்த குறளில் நன்று என இருக்கிறது அதில் நன் என்பதில் ஓரெழுத்துதான் இருக்கிறது எனவே நேர் எனக்கொண்டு கடைசியில் குற்றியலுகரமாகிய  று இருப்பதால் பு சேர்த்து நேர்பு என வாய்பாடு எழுதவேண்டும். கடைசிக் குறளில் பொதிந்து என வந்திருக்கிறது அதில் பொதிந் என்பதில் இரண்டு எழுத்துகள் இருக்கின்றன.அதை நிரை எனக்கொண்டு கடைசி எழுத்தாக குற்றியலுகரமாகிய து வந்துள்ளதால் பு சேர்த்து நிரைபு எனக்கொண்டு பிறப்பு என வாய்பாடு கூறவேண்டும். ஓரசைச்சீர்கள் நான்கு அவைகள் நேர்,நிரை, நேர்பு,நிரைபு .நேர் என வந்தால் நாள் எனவும்,நிரை என முடிந்தால் மலர் எனவும்,நேர்பு என் முடிந்தால் காசு எனவும்,நிரைபு என முடிந்தால் பிறப்பு எனவும் எழுதவேண்டும்.அடுத்த பாடத்தில் வாய்பாடு கூறுதலைப் பார்ப்போம்.

;