headlines

img

எளிய வழியில் இலக்கணம் - 12 : முல்லை நிலத்திற்குரிய கருப்பொருள்கள் - கோவி.பால.முருகு

தமிழ் அறிவோம்

குறிஞ்சி நிலத்திற்குச் சொன்னது போலவே முல்லைக்கும் கருப்பொருள்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழியைப் பார்ப்போம்.கருப்பொருள்களின் பெயர்களை குறிஞ்சியிலேயே சொல்லியிருக்கிறேன்.இருந்தாலும் இன்னொருமுறை சொல்லுகிறேன்.
தெய்வம்-தெய்வத்தை வணங்கும் மக்கள்-மக்கள் உண்ணும் உணவு-உணவைத்தரும் விலங்குகள்-விலங்குகளுக்கு அணிவிக்கும் பூ-மாலை-, அந்தப் பூ இருக்கும் மரம்-மரத்தில் இருக்கும் பறவை-பறவை இருக்கும் நீர்-நிலை.நீர் நிலைகள் உள்ள ஊர்-.ஊர் மக்கள் இசைக்கும் பறை, யாழ், பண்- இவைகளை இசைத்துக் கொண்டே செய்யும் தொழில்எனவே,அதையே ஐந்து திணைகளுக்கும் எழுதிக்கொள்ளுங்கள்.இப்போது அதனதன் முன்னே எழுதவேண்டிய கருப்பொருள்களின் பெயர்களைப் பார்ப்போம்.
இப்போது விளையாட்டாக ஒரு செய்தியைச் சொல்லுகிறேன்.கவனாமாகக் கேளுங்கள்.
திருமாலை வணங்கி, ஆயா, ஆச்சி, நான், மாமா நால்வரும் சாமிவரம் கேட்கச் செல்லும்போது  வழியில் புலியைப் பார்த்து மாமாவிடம்  மாமூ…புலி என்றேன்.. அங்கே விலங்குகள் முள் தோன்றிய இடத்தில் உயிர்களைக் கொன்றும் காய்களைத் தின்றும் அலைந்தன. பக்கத்திலேயே மகாகோழி சுற்றி வந்தது. காட்டாற்றின் சத்தம் காதுகளில் பாடிசேர்ந்து மகிழ்ச்சி அளித்தது.விலங்குகளை விரட்ட ஏறுகோட்பறையை  அடித்து,முல்லை யாழை மீட்டி, முல்லைப் பண்ணைப் பாடினோம்.நாங்கள் காளையைத் தழுவி,பசுவை மேய்க்கும் தொழில் செய்பவர்கள்.
இப்போது முதலில் சொன்ன கருப்பொருள்களை எழுதிக்கொண்டு அதற்குப் பிறகு அதனெதிரே பெயர்களை எழுதலாம்.
தெய்வம்- திருமால்
மக்கள்-ஆயர் ஆய்ச்சியர் (ஆயா ஆச்சி)
உணவு-சாமை, வரகு (சாமிவரம், சாமி-சாமை, வரம்-வரகு)
விலங்கு- மான், முயல், புலி (மாமூ புலி-மா-மான், மூ-முயல், புலி)
பூ- முல்லை, தோன்றி- (முள் தோன்றிய)
மரம் –கொன்றை, காயா (உயிர்களைக் கொன்றும்-கொன்றை, காய்களை தின்றும் - காயா)
பறவை- மயில், காட்டுக்கோழி (மகா கோழி-ம-மயில், கா கோழி-காட்டுக்கோழி)
நீர்-காட்டாறு (காட்டாற்றின் சத்தம்)
ஊர்-பாடி, சேரி (பாடிச்சேர்ந்து-பாடி-பாடி, சேர்ந்தது-சேரி)
பறை-ஏறுகோட்பறை
யாழ்- முல்லை யாழ்
பண்-முல்லைப் பண்
தொழில்-ஏறு தழுவுதல், பசு மேய்த்தல்
அன்புடையீர் எளிய வழியில் இலக்கணம் என்று நான் எழுதிவருவது வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும்.இப்படி எழுதுவதால் இலக்கணம் கெடாது. இம்முறையானது விடையைக் குறியீடுகள் வழி நினைவில் வைத்துக் கொள்ளுதல். ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும்.சுமையாக இருக்காது. ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்தாலே போதும். அதுபோல நான் சொல்லும் குறியீடுகளைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்றவாறு குறியீடுகளை அமைத்துக் கொள்ளலாம். அது இன்னும் சிறப்பு. அதற்கான தூண்டுதல்தான் இது.

;