வாழும் நெறியில் பொறாமை போக்கு
வாழ்வில் ஒழுக்கம் ஒன்றிட ஆக்கு!
வாழ்வோர் மீதுப் பொறாமை நீக்கு
வாழும் பேற்றை வாழ்த்திட ஆக்கு!
அறமும் ஆக்கமும் வேண்டா தொருவன்
அடுத்தவர் பெருமைப் போற்றா திருப்பான்!
பொறாமை கொண்டு தீச்செயல் புரிந்தால்
பொருந்திடும் துன்பம் நெறுங்கிட அழிவான்!
பொறாமைக் குணமே பகையாய் மாறும்
போரென மாறி அவரைச் சாரும்!
பொறாமை கொண்டு கொடுப்பதைத் தடுத்தால்
போற்றிடும் சுற்றம் உணவின்றிக் கெடும்!
செல்வமாம் இலக்குமிப் பொறாமை கொண்டாரை
சேர்த்திடும் தமக்கை மூதேவி யிடத்தில்!
செல்வம் அழிக்கும் பொறாமைத் தீமை
சேர்த்திடும் தீய வழியினில் அவனை!
பொறாமை கொண்டவன் ஆக்கம் பெறுவதும்
பொறாமை இலாதான் கேடு உறுவதும்
பொறுப்புடன் ஆராயத் தக்கவை ஆகும்!
பொறாமை அகற்றிப் போற்றுக அதனை!
பொறாமை கொண்டோர் பெருமை அடையார்
பொறாமை இலாதார் பெருமை தாழார்!
பொறாமை போக்கு புதுநெறி ஆக்கு
போற்றிட உன்னில் புகழைத் தேக்கு!