கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதெல்லாம் பழைய காலம். இப்போது எட்டு மணி நேரமல்ல, எட்டு நிமிடங்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை. ஆனாலும் பாஜகவினர் - கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் அதற்காக கொஞ்சமும் வெட்கப்படுவதுமில்லை.
கடந்த வாரம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய வானியல் ஆய்வு மையம் ஜூலை 23ஆம் தேதியே ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கொடுத்தது என்று கூசாமல் கூறி னார். அது தவறான தகவல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள், உடனடியாக மறுப்புத் தெரிவித்தனர். கேரள முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் அதிகாரப்பூர்வ தகவல்களுடன் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அமித்ஷா மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் திங்களன்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், மாநிலங்க ளவையில் துறை சார்ந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது தவறான தகவல்களைக் கூறியதால் அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியிருக்கிறார். அதாவது விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது குறித்த விவாதத்தில் பேசிய அமைச்சர் சவுகான், “தேவை எழுகின்ற போதெல்லாம் விளை பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே ஒன்றிய அரசு கொள்முதல் செய்கிறது” என்று கூறியிருக்கி றார். ஆனால் உண்மை நிலை அதுவல்ல!
சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என்ப தால் விவசாயிகளிடமிருந்து விளை பொருள்க ளை உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 விழுக் காடு லாபத்தொகை வைத்துக் கொள்முதல் செய்ய இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டிலேயே பாஜக அரசு கூறிவிட்டது. ஆனால் இப்போது விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டு வர வேண்டுமென போராடிக் கொண்டிருக்கும் சூழலில், அவையில் தவறான தகவலைத் தந்துள்ளார் அமைச்சர்.
அதுமட்டுமின்றி உரங்களின் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைத்துள்ளதாகவும் சவுகான் தெரிவித்துள்ளார். ஆனால் 50 கிலோ உரமூட்டை முன்பு ரூ.268க்கு விற்றது, தற்போது ரூ.266க்கு விற்கப்படுகிறது. வெறும் 2 ரூபாய் மட்டுமே குறைந்துள்ள நிலையில் அமைச்சர் அவையை தவறாக வழி நடத்தியுள்ளார் என்று ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் அம்பலப் படுத்தியுள்ளார்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? கிலோவுக்கு 10 ரூபாய் என்றால் 50 கிலோ மூட்டைக்கு 500 ரூபாய் குறைய வேண்டும். ஆனால் மொத்த விலையே ரூ.268 தானே! அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு என்பது இதுதானோ!