மணிப்பூரில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி யையும், கொதிப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. மீண்டும் மீண்டும் நடக்கும் மோதல்கள், வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தேச விரோதிகள் போல் சித்தரித்து அம்மாநில முதலமைச்சரே பேசத் துவங்கியிருப்பது ஒரு ஆத்திரமூட்டலா கவே மாறியுள்ளது. இது இன்னும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் ஓராண்டுக்கு மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அவரது சுதந்திர தின உரை உட்பட எந்த உரையிலும் மணிப்பூர் மாநி லத்தைப் பற்றியோ, அங்கு அமைதி திரும்பட்டும் என்று வெறும் பெயரளவிற்குக் கூடவோ இடம் பெறவில்லை. அதுமட்டுமல்ல, மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை பிரச்சனையை மையப்படுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், மணிப்பூரின் மகள்கள் இப்போதும் கொடூரமான துன்ப, துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் வேதனையை துளி அளவும் பகிர்ந்து கொள்ள வில்லை. அவர் மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையிலும் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இல்லை.
இத்தகைய பின்னணியில்தான் மீண்டும் அங்கு வன்முறைகள் வெடித்துள்ளன. குறிப்பாக பழங்குடி அல்லாத - பெரும்பான்மையாக உள்ள மெய்டெய் சமூக மக்களின் குழுக்கள் சார்பாக வும், எதிர்த்தரப்பாக உள்ள - பழங்குடியின குக்கி மற்றும் ஜோ இன மக்களின் குழுக்களுக்கு எதிராக வும் தொடர்ந்து பிரிவினையையும், பதற்றத்தையும் நீட்டிக்கச் செய்யும் சமூக விரோதச் செயல்களில் மாநில பாஜக அரசே ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் எதிர் வினையாகத்தான் பாஜக நிர்வாகிகளின் வீடு களை நோக்கி குக்கி - ஜோ இன மக்கள் குழுக்கள் ஊர்வலம் செல்வதும், பாஜக நிர்வாகியின் வீட்டை எரித்திருப்பதும் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களைத் தொடர்ந்து பாஜக முதலமைச்சர் பைரேன் சிங்கே நேரடி யாக, குக்கி இன மக்களுக்கு எதிராக ஆத்தி ரத்தையும், வன்முறையையும் தூண்டும் விதத்தில் பேசத் துவங்கியுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் மணிப்பூர் இன கலவரத்திற்கும் வன்முறை வெறியாட்டங்களுக்கும் வித்திட்டதே பாரதிய ஜனதா கட்சியின் மாநில அரசாங்கம் தான். நிலைமை கைமீறி சென்ற பிறகும்கூட, அதை கட்டுக்குள் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் இதுவரையிலும் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை பைரேன் சிங் அரசு. இதன் விளைவாக ஒட்டு மொத்த மணிப்பூர் மாநிலமும் தொடர்ந்து பதற்றத்தின் பிடியில், கொடிய வன்முறை நெருப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.