தில்லியில் தனியார் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை இரவு வெள்ளம் புகுந்ததால் மூன்று மாணவர்கள் பலியான கொடுமை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்த குறுகிய விவாதத்தில் பாஜக எம்பிக்கள் மட்டுமல்லாது ஒன்றிய அமைச்சர்களும் தில்லி அரசு மீதே குற்றம் சாட்டினர்.
கழிவு நீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததே இதற்கு காரணம் என பாஜக எம்பி ஒருவரும் தில்லி அரசின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஒருவரும் குறை கூறியுள்ளனர்.
தில்லியை 15 ஆண்டு காலம் பாஜகவே ஆண்டது. இப்போதும் துணைநிலை ஆளுநர் மூலம் அத்துமீறல், ஆதிக்க நிர்வாகம் தானே நடத்தப்படுகிறது. இந்நிலையில் நல்லது நடந்தால் தாங்கள் தான் காரணம் என்பதும் கெட்டது நடந் தால் அடுத்தவர் மீது பழி போடுவதும் பாஜகவுக்கு புதிதல்லவே! இதுதானே மோடி, அவரது அமைச்சர்களின் திசை திருப்பும் வேலை.
இந்த நிகழ்வு தொடர்பான விவாதத்தின் போது பதில் கூறிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால் மத்திய- மாநில அரசுகளுக்கு பொறுப்புள்ளது என்று கூறி யிருக்கிறார். இப்போது தான் மாநிலம் பற்றிய நினைவு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கும் போது அந்த உணர்வு வரவே யில்லை. திணிப்பு வேலை தானே நடந்தது. அந்தக் கொள்கையில் தனியார்மயமும் வணிகமயமும் சேர்ந்தே தானே இருந்தது. ஆனால் இப்போது கல்வி வணிகமயமாவதில் இந்த பயிற்சி மையங்கள் முக்கியக் காரணமாக உள்ளன என்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியிருக்கிறார்.
இந்த தீமைகளுக்கெல்லாம் மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை தானே மூல காரணம். தனியார்மய, கார்ப்பரேட் கூட்டுக் கொள்ளை நடைமுறைகள் தானே பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாய் அமைந்துள் ளன. முன்பு வேலை நியமனத்துக்குத் தான் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, பிஎஸ்ஆர்பி, ஆர்ஆர்பி போன்ற நிறுவனங்கள்தேர்வுகள் நடத்தின. ஆனால் பாஜக ஆட்சியில் தான் கல்விக்குத் தேர்வு நடத்துவதற்கு-அதுவும் தனி ஏஜென்சி - தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்பட்டது. அது இதுவரை நடத்திய தேர்வுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், முறைகேடு கள் மூலம் ‘சாதனை’ படைத்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களே இத்தகைய பயிற்சி மையங்கள் புற்றீசல் போல பெருகுவ தற்கு காரணங்களாக இருக்கின்றன. அதனால் அவை விதிமீறல்களை கண்டு கொள்ளாமல் விடு வது மட்டுமின்றி அவற்றுக்கு பாதுகாவலாகவும் இருக்கின்றன. எனவே சட்டரீதியான கறாரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசி யம். அதுவே இத்தகைய நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். இதில் தில்லி துணை நிலை ஆளுநர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டி யது முக்கியம்.