headlines

img

‘‘அசல்’’ போலிகள்!

உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024 இல், பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் அதிகமான போலிச் செய்திகள் பரவும் என்றும், அதன் எதிரொலியாகத்  தேர்தல் செயல்முறைகளே சீர்குலையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ போலிச் செய்திகளும், வதந்திகளும் வளர்ந்திருக்கின்றன.

 2023 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின்  அறிக்கையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் 15 ஆவது இடத்திலிருந்த இந்தியா, தேர்தல் நடைபெறவுள்ள இந்தாண்டு முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இதன் பெருமை பாஜகவின் டிஜிட்டல் கூலிப்படைகளைத் தான் சாரும். அதில் ஒன்றிய அமைச்சர்கள் துவங்கி அடிமட்ட சங்பரிவார் உறுப்பினர் வரை யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.  இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ்ஆப், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம், யுடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுவது தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக வார்த்தைகளை விட பார்வையாளர்களை, படங்கள் மற்றும்  வீடியோக்கள் 60 ஆயிரம் மடங்கு அதிக வேகத்தில் ஈர்க்கின்றன; செயல்படவும் வைக்கின்றன என்கின்றன ஆய்வுகள். சுருக்கமாகக் கூறுவதென்றால், சமூக வலைத்தளங்கள் சிந்தனையை விட உணர்வுகளின் அடிப்படையில்தான் அதிகமாகச் செயல்படுகின்றன. இதைப் பயன்படுத்தியே இந்தியாவில் வலதுசாரிகள் சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டிவிட்டும், அதன் அடிப்படையில் போலியான செய்திகளைப் பரப்பியும் ஆதாயம் அடைகின்றனர்.  பொய்களைப் பரப்புவதில் மட்டுமல்ல, போலிகளிலும் எப்போதும் பாஜகதான் முதலிடம். அதிலும் பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்குத் தனி இடம்.

போலி சுங்கச்சாவடி, போலி அரசு அலுவலகங்கள் எனத் துவங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை போலிகளில் முத்திரை பாதித்த மாநிலம் குஜராத்தான். அங்குள்ள மோர்பியிலிருந்து கட்ச் வரையிலான நெடுஞ்சாலையில் வகாசியா சுங்கச்சாவடி போலியான ஒன்று என்று ஓராண்டிற்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தினந்தோறும் 2 ஆயிரம் வாகனங்கள். ரூ.20 முதல் ரூ.200 வரை வசூல். இதைச் செய்தது வேறு யாருமல்ல, பாஜக மாவட்டத் தலைவர் தர்மேந்திரசிங்.  

குஜராத்தின் தாஹோட் மற்றும் தபோ மாவட்டத்தில் மட்டும் 6 போலி அரசு அலுவலகங்களை 7 ஆண்டுகளாக நடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு சந்தி சிரித்தது. இதில் இந்த போலி அலுவலகங்களுக்கு அம்மாநில அரசு ரூ.21 கோடியும் வழங்கியிருக்கிறது. இதுதான் மோடி முன்வைக்கும் டிஜிட்டல் இந்தியாவின் அதிநவீன வளர்ச்சி.