headlines

img

மனிதர் தூக்க மனிதர் அமரும் வழக்கம் இனியுண்டோ?

தர்மபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது. பட்டினபிரவேசம் எனும் இந்த நிகழ்வை கால மாற்றத்தை கருத்தில் கொண்டு பல்லக்கை மனி தர்கள் தூக்கிச் செல்லும் மனித உரிமைக்கும், கண்ணியத்திற்கும் எதிரான நடைமுறையை கைவிட தர்மபுரம் ஆதீனம் முன் வரவேண்டும்.  நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு பட்டினபிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் பல்லக்கில் அமரவைத்து தமிழகத்தில் உள்ள மடாதிபதிகளை தூக்கிச் செல்லும் நடைமுறை இருந்தது. தந்தை பெரியாரின் எதிர்ப்புக் காரண மாக காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இந்த நடை முறை கைவிடப்பட்டு நீண்டகாலமாகிறது.

திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தின் காரணமாக 55 ஆண்டுகளுக்கு முன்பே தர்மபுரம் ஆதீனத்திலும் இந்த நடைமுறை கைவிடப்பட்டு விட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் இதற் கான முன்முயற்சியை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது தர்மபுரம் ஆதீனமாக பொறுப் பேற்றுள்ளவர் முன்பு 2020ல் திருப்பனந்தாள் மடத்தில் இருந்த போது இதேபோன்று மனிதர் கள் தூக்கிச் செல்லும் வகையில் பட்டினபிரவே சத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்ப்பு எழுந்த தன் காரணமாக அவர் தமக்கு மனிதர்கள் சுமக்கும்  பல்லக்கு தேவையில்லை என்று கூறினார்.

ஆனால் அவர்தான் இப்போது தர்மபுரம் ஆதீனத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுள் ளார். இம்மாதம் 22ஆம் தேதி பல்லக்கை மனி தர்கள் தூக்கிச் செல்லும் வகையில் வழக் கொழிந்த நடைமுறையை மீண்டும் ஏற்பாடு செய்யும் நிலையில்தான் மயிலாடுதுறை கோட் டாட்சியர் தடை விதித்துள்ளார். பழைய நடை முறையை பாரம்பரியம் என்கிற பெயரில் புதுப் பிக்க முயல்வதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள  நிலையில்தான் கோட்டாட்சியர் தடைவிதித் துள்ளார். 

மற்றபடி கடந்த 55 ஆண்டுகளாக பின்பற்றப் படும் நடைமுறையின்படி பட்டினபிரவேசம் நிகழ்வை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் மனித உரிமைக்கு எதிரான இந்த நடைமுறையை பக்தர்கள், ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் சிலர் நியாயப்படுத்த முயல்வது முறையல்ல.

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பின் மூர்க்கம் மற்றும் ஆளுநர் ரவி தமிழ், சைவ மரபில் வந்த தர்மபுரம் ஆதின மடத்திற்கு வந்து சென்ற பிறகு தான் தேவையற்ற சர்ச்சைகள் எழுகின்றன. மதுரை ஆதினம் தனது பங்கிற்கு இந்த பிரச்ச னையை பெரிதாக்க முயல்கிறார்.

நவீன அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத எத்தனையோ நடைமுறைகளை, மூட பழக்க வழக்கங்களை, சனாதன சம்பிரதாயங்களை மத நிறுவனங்கள் கைவிட்டுள்ளன. ஆனால் இந்துத்துவா சக்திகள் தமிழகத்தை சீரழிக்க முயலும் இந்த சூழல் குறித்து மதச்சார்பற்ற சக்திகள் மட்டுமின்றி பக்தர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரின் கண்ணியமும், உரிமையும், சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.