headlines

ஆளுநர் ரவியின் வன்மம் தொடர் கதையா?

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி இந்தப் பதவிக்கு வந்த காலத்தி லிருந்தே தேவையற்ற வீண் விவாதங்களை கிளப்பி வருகிறார். ஆளுநர் அலுவலகத்தையே ஆர்எஸ்எஸ் கிளை அலுவலகம் போல மாற்றி வைத்துள்ள இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுக்கு எதிராக ஒரு போட்டி அர சாங்கத்தையே நடத்தி வருகிறார்.

இவருடைய அத்துமீறலையும், அராஜகத்தை யும் உச்சநீதிமன்றமே பலமுறை கண்டித்த பிறகும் இவர் திருந்துவதாக இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணமாக பள்ளி விழா ஒன்றில் பேசும் போது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாடத்திட்டங்கள் மிகவும் மோசமாக இருக்கிறது என்று மட்டம் தட்டியுள்ளார். அத்துடன் ஒன்றிய பாடத்திட்டம் தான் மிகவும் உயர்நிலையில் இருக்கிறது என்றும் பேசியுள்ளார்.

கல்வி என்பது மாநில அரசுப் பட்டியலில் இருந்தது. அவசர நிலை காலத்தின்போதுதான் கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டு செல் லப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை ஒட்டுமொத்த கல்வித்துறையையும் ஒன்றிய பட்டியலுக்கு மாற்ற வகை செய்கிறது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையின் அறி விக்கப்படாத விளம்பர தூதர் போல செயல்படும் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கே தெரியாமல் பல் கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை பின்பற்று மாறு நிர்ப்பந்திக்கிறார்.

கல்வித்துறையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மோடி அரசின் செயல்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையி லேயே எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மாநில பாடத்திட்டத்தின் மீது தமிழக ஆளுநர் தாக்குதல் தொடுத்துள்ளார். 

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் லட்சணம் பலமுறை சந்தி சிரித்துள்ளது. நீட் போன்ற தேர்வு களை நடத்தும் முகமையான தேசிய தேர்வு முக மையின் தரம் சமீபத்தில் நடந்த நீட் தேர்வின் போது பல்லைக் காட்டியது.

ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் பாடத்திட்டம் என்பது அப்பட்டமான மதவெறியை ஊக்கு விப்பதாகவும், அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் எதிரானதாகவும் பல சமயங்களில் இருந்துள்ளது. மதச்சார்பற்ற தன்மை கொண்ட பாடங்களை தானடித்த மூப்பாக என்சிஇஆர்டி நீக்கியதும் நடந்துள்ளது. மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் கருத்தி யலை திணிக்கும் பாடங்கள் திட்டமிட்டு புகுத்தப் படுகின்றன. 

மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் வரலாறு, பண்பாடு, சமூகவியல் ஆகியவையும் இடம் பெறுகின்றன.  பன்முகத் தன்மையை வலியுறுத்தும் இந்த பாடத்திட்டம் தான் ஆளுநர் ரவியின் கண்ணை உறுத்துகிறது. ஆளுநர் வேலையைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் பார்க்கும் ஆர்.என்.ரவி தனது உள்ளடி வேலைகளை நிறுத்திக் கொள்ளட்டும்.