headlines

img

பரிதவிப்பும்- சுய பிரதாபமும்

உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் நவீன் பலியானதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சியை யும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர் களை மீட்கும் பணி ஒருபுறத்தில் நடந்து கொண்டி ருந்தாலும், தங்களை காப்பாற்றுமாறு   அங்குள்ள  மாணவர்கள் கதறுவதும், தங்களது பிள்ளைகளை மீட்டுக் கொண்டு வருமாறு பெற்றோர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுப்பதும் இதயத்தை உருக்குவதாக உள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் ஏற் பட்டுள்ள மோதலில் சிக்கி தாயகம் திரும்ப முடியா மல் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எவ்வளவு விரைவில் முடி யுமோ அவ்வளவு விரைவில் அனைத்து வாய்ப்புக ளையும் பயன்படுத்தி இந்த மீட்புப் பணி செய்யப்பட வேண்டும். 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் ஏற் படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உலக நாடுக ளால் உணரப்பட்ட நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்களை முன்கூட்டியே அழைத்து வருவதற் கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நியாயமானதே. 

ஆப்கானிஸ்தானில் பிரச்சனை எழுந்தபோது இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா மூலம் அங்கிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் தற்போது உக்ரை னில் தவிக்கும் மாணவர்களை அழைத்து வர இந்தியாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி களில் அநியாய கட்டணக் கொள்ளை காரணமாக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்து வம் படிக்க செல்கின்றனர். ஒப்பீட்டு அளவில் அது மலிவாக உள்ளது எனக் கருதுகின்றனர். இதைப் போக்க அதிகளவில் அரசு மருத்துவக் கல்லூரி களை உருவாக்குவோம் என்று கூறுவதற்கு பதி லாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்க  வேண்டும் என்று ஆசி வழங்குகிறார் பிரதமர் மோடி.

உக்ரைனில் பயிலும் தமிழக மாணவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான செலவு முழு வதையும் தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபிறகு தான் இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்கும் செலவை ஒன்றிய அரசு ஏற்கும் என பிரதமர் அறிவித்தார்.

போர்ச்சூழலில் சிக்கியுள்ள தன்னுடைய சொந்த மக்களை மீட்பது ஒரு நாட்டினுடைய அடிப்படையான கடமை. எந்தவொரு நாடாக இருந்தாலும் இதைச் செய்யும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனிலிருந்து இந்திய மாண வர்களை அழைத்து வருவதைக்கூட தன்னுடைய தனிப்பட்ட சாதனைப் போல உ.பி. தேர்தல் களத்தில் பேசியிருப்பது நாகரிகமானதல்ல. உக்ரைன் போரைக் கூட பிரதமருக்கு பெருமை சேர்க்க சில ஊடகங்கள் முயலும் போது அதற்கு நெய் ஊற்றி வளர்த்து விடுகிறார் பிரதமர் மோடி.