headlines

img

நடுவர் ஆட்டக்காரராகலாமா?

நவம்பர் 25இல் தொடங்கிய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அதானி குழுமத்தினர் ரூ.2239 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத் தல், மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தத் தவறியது, சம்பல் ஜமா மசூதி பிரச்சனையையொட்டி இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் - நால்வர் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தின் இரு அவைக ளிலும்  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு இரு அவைகளின் தலைவர்களும் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் அதானி லஞ்சம் கொடுத்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக பாஜக உறுப்பினர்கள் நிஷிகாந்த் துபே (மக்களவை), சுதான்சு திரிவேதி (மாநிலங்களவை) அமெரிக்க தொழிலதிபர் சோரஸ் உடன் காங்கிரசை தொடர்பு படுத்தி குற்றம் சாட்டிப் பேசினர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதானி விவ காரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பேச முற்படும் போதெல்லாம் ஆளும் பாஜக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் செய்து அவையை ஒத்தி வைக்கும்படி செய்தனர். 

பொதுவாக எதிர்க்கட்சியினர் அமளி, அவை ஒத்தி வைப்பு என்று தான் செய்திகள் வரும். ஆனால் பாஜக ஆட்சியில் ஆளும் கட்சியினர் அமளியி லும் ரகளையிலும் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. ஏற்கெனவே ஹிண்டர்பர்க் ஆய்வு நிறு வனம் அதானியின் முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போதும் அதுபற்றி பேச விடாமல் கலகம் செய்து எதிர்க்கட்சி உறுப்பினர் களை எல்லாம் சஸ்பெண்ட் செய்தும் சாதனை படைத்தது பாஜக ஆட்சி.

தற்போதும் அதானி லஞ்சம் கொடுத்தது தொ டர்பான உண்மை வெளிவரவிடாமல் தடுக்க திசை திருப்ப பாஜகவினர்க்கு மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி கொடுத்து பாரபட்சமாக நடந்து கொண்டார். இது முதல்முறையல்ல. கடந்த கூட்டத்தொடரின் போதே அவரது பாரபட்ச செயல்பாடுகளை கண்டித்து அவரை பதவியி லிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வருவது என்று  ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியா கூட்டணி முயற்சித்தது. ஆயினும் அப்போது கைவிட்டு விட்டது. ஆனாலும் மாநிலங்களவை தலை வரின் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. 

குடியரசு துணைத் தலைவராக இருப்பவர், நடுவராக இருக்க வேண்டியவர், ஆட்டக்காரரா கவே அவ்வப்பொழுது மாறிவிடும் நிகழ்வு தொ டர்ந்ததால் தற்போது இந்தியா கூட்டணிக் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வருவ தற்கான நோட்டீஸை மாநிலங்களவை செயலகத்தில் செவ்வாயன்று கொடுத்துள்ளன. இதையடுத்து 14 நாட்களுக்குப் பிறகு பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். அதன் மீது விவாதம் நடைபெறும். இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பாஜக ஆட்சியில் அனைத்து நடைமுறைகளும் மீறப்படும்பொழுது அதை கட்டுப்படுத்தும் அம்பலப்படுத்தும் புதிய முன்னெடுப்புகளும் காலத்தின் கட்டாயமே.