பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர் நீரஜ் சோப்ரா. பின்லாந்தில் பழைய நகரமான துர்க்குவில் பாவோ நூர்மி விளையாட்டு போட்டி நடைபெற்றது. நேற்று நடந்த போட்டியில் பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு தனது சிறந்த செயல்திறனை வெளிகாட்டியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். அதில் முதல் சுற்றில் 86.92 மீட்டர் தூரம் எறிந்து போட்டியை துவங்கிய சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 89.30 மீட்டர் தூரம் வரை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்ததுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரம் எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.
கடந்த ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தேசிய அளவில் சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
அடுத்ததாக, வரும் சனிக்கிழமை நீரஜ் சோப்ரா பின்லாந்தில் கூர்ட்டானே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்.