games

img

கால்பந்து எனும் அற்புதம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி அதன் நூற்றாண்டை எட்ட இன்னும் 8 ஆண்டுகளே உள்ளன. 1930 ஆம் ஆண்டு உருகுவேயில் தொடங்கிய அதன் பயணம் இடையில் யுத்த வெறியால் ஏற்பட்ட சில தடைகளையெல்லாம் தாண்டி தற்போது 22ஆவது பதிப்பாக 2022இல் அரபு தேசத்தின் குட்டி நாடான கத்தாரை வந்தடைந்துள்ளது.  கால்பந்து விளையாட்டு எங்கு, எப்படித் தோன்றியது என்பதற்கான தெளிவான சான்றுகள் இதுவரை இல்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. கெட்ட போரிடும் உலகில் அமைதியை நிலைநாட்டி மனிதகுலத்தை ஒன்றிணைக்க கால்பந்து போட்டிகள் உதவும் என்ற சிந்தனை யூல்ஸ் ரிமெ என்ற பிரஞ்சுக்காரரின் எண்ணத்தில் உதித்தது. அது குறித்து அவர் தனது சகாக்களுடன் விவாதித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறவியெடுத்ததுதான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் எனும் அற்புதம்.

கால்பந்து போட்டிகளுக்கான விதிமுறைகளை உருவாக்கும் முயற்சி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் 1846இல் துவங்கியது. உலகின் முதல் கால்பந்து கிளப் ஷெபீல்டு யுனைட்டெட் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இங்கிலீஸ் கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு மைதானம், வீரர்கள், விளையாடும் முறை ஆகியவை குறித்த சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வரத்துவங்கின. கோல்கீப்பர் எனும் ஏற்பாடு 1871இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கோல் கம்பங்களை இணைக்கும் குறுக்குக் கம்பம் (கிராஸ் பார்) நடைமுறைக்கு வந்தது 1875ஆம் ஆண்டுதான். ஆரம்ப காலங்களில் கோல்வளை இல்லாமல்தான் கால்பந்து விளையாடப்பட்டு வந்தது. கோல்வளையும் பெனால்டி கிக்கும் 1891ஆம் ஆண்டில் அறிமுகமாகின. 1904ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ‘பிபா’ (சர்வதேசக் கால்பந்து கழகம்) உருவானது. பெல்ஜியம், டென்மார்க், பிரான்சு, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்று 211 நாடுகள் ‘பிபா’வில் உறுப்பினர்களாக உள்ளன. இப்படி பல்வேறு வரலாறுகளைக் கொண்டுள்ள கால்பந்து தனது 22ஆவது பதிப்பை எட்டி நிற்கும் வேளையில் போட்டியை வெல்லும் முனைப்புடன் 32 நாடுகள் களமிறங்கக் காத்திருக்கின்றன. இதுவரை உருகுவே, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டினா, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. இதில் இத்தாலி கடந்த முறையைப் போலவே இந்த முறையும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற இயலாமல் போய்விட்டது. 

இதுவரை நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்ற அணிகளில் இடம் பெற்ற மொத்த வீரர்களின் எண்ணிக்கை 445. கால்பந்து ஜாம்பவான் பீலே, மாரடோனா, பெக்கன் போவர், ஜினடின் ஜிடேன் போன்றவர்களின் பெயர்கள் அதில் உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறுவதற்கு லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஜூனியர் ஆகியோர் உலகக் கோப்பையை வெல்வது அத்தியாவசியமாகிறது. இவர்கள் மூவருக்கும் இனியொரு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. இதில் 31 வயதாகும் நெய்மருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் வியப்பதிற்கில்லை. ஆனால் 36 வயதான மெஸ்ஸியும், 37வயது நிரம்பிய ரொனால்டோவும் 2026 உலகக் கோப்பை போட்டியில் களம் காணமாட்டார்கள் என்பது உறுதி. கால்பந்து உலகில் இருவருமே சாதனை மன்னர்களாகத் திகழ்கிறார்கள் என்ற போதிலும் இதுவரை உலகக் கோப்பையை வெல்ல இயலாதது பெரும் குறையாகத் தொடர்கிறது. அதையும் வென்றால் அது அவர்களின் மகுடத்தில் சூடும் மேலும் ஒரு பொன்னிற்காக அமையும். இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியலில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 பேர் மட்டுமே. 

மெஸ்ஸி, நெய்மர், கிறிஸ்டியானோ மூவரும் வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவதற்கு இறுதிவரைப் போராடுவார்கள் என்பது நிச்சயம். ஆனால் கால்பந்தில் என்ன நடக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது என்பதுதான் கடந்த கால வரலாறு. பல சூரர்களைக் கண்ணீர் கடலில் ஆழ்த்திய வரலாறைக் கொண்டதுதான் கால்பந்து. நடப்பு சாம்பியன் பிரான்சு, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளும் கோப்பைக்கான போட்டியில் உள்ளன. செனகல், கேமரூன் போன்ற ஆப்பிரிக்க அணிகள் கருப்புக் குதிரைகளாக மாறும்பட்சத்தில் ஆட்டத்தின் போக்குத் திசைமாறிப் போகும். கால்பந்தில் வேகமும் விவேகமும்தான் எப்போதும் வெற்றிபெறும். அது யாருக்கு வாய்க்கிறதோ அவர்களே மன்னர்கள். ஆறு ஆட்டங்களைக் கடந்து ஏழாவது ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் ஆனந்தக்கூத்தாடுவார்கள். நூற்றாண்டை நெருங்கி நிற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் காலத்திற்கேற்ற மாற்றத்துடன் என்றுமே விளையாட்டு உலகின் உச்சத்தில் இருந்து வருகிறது. எதிர்வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்கு உலகின் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் உறக்கத்தை இழப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய விசயமாக இருக்கப்போவதில்லை.

- மு.சங்கரநயினார்