1363 ஆட்டங்களில் (அனைத்துவிதமான போட்டிகள்) 1281 கோல்கள் 3 முறை உலகக்கோப்பை (1958, 1962, 1970) 77 கோல்கள் தேசிய அணிக்காக என பல்வேறு சாதனைகளை படைத்திருந்த போதிலும் வெற்றியில் பீலே ஒருபோதும் மதிமறந்தது கிடையாது.
1930-ஆம் ஆண்டுகளில் கறுப்பினத்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், பிரேசில் நாட்டை கால்பந்து உலகின் சிம்மாசனத்தில் அமரவைக்க ஒரு கறுப்பின வீரரால்தான் முடிந்தது என்பது கால்பந்து உலகம் கண்ட அதிசயம். ஒரு கால்பந்து வீரரின் ஆட்டத்தைக் காண்பதற்காக நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் 48 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டதும் வரலாறு மற்றும் 3 உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே கால்பந்து வீரர். மேற்குறிப்பிட்ட 3 பெருமைகளுக்கும் சொந்தக்காரரின் பெயர் எட்சன் பீலே.
யார் இந்த பீலே?
1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி டோன்டின்ஹோ - செலஸ்டே தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் எட்சன் பீலே. பீலேவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். மிகவும் வறுமையில் வளர்ந்த பீலே,வறுமையால் வழிமாறிப் போகவிருந்த வாழ்க்கை தனது தந்தையின் அரவணைப்பால் கால்பந்து எனும் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, புத்தகத்தை பிடிக்க வேண்டிய அவரது கைகள் டீ கடையில் டம்ளரை கழுவின. அப்போதும் வறுமை ஓயவில்லை. வீதி வீதியாக அலைந்து ஷூ பாலிஷ் போட்டுக் கொண்டும் வசதி படைத்தவர்கள் வீட்டு தரையை துடைத்துக் கொண்டும் இருந்த அந்த சிறுவன்தான் தேசத்தின் அடையாளமாக மாறினான். 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி அர்ஜெண்டினா அணிக்கு எதிராக தேசிய அணியில் இடம் பிடித்த பீலே, அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1958-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டிகளை நடத்திய சுவீடனுக்கு நூற்றாண்டின் சிறந்த கோலை அடித்ததோடு மட்டுமல்லாமல் பிரேசிலுக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத்தந்தார். நான்கு ஆட்டங்களில் ஆடிய பீலே மொத்தம் 6 கோல்கள் அடித்து அசத்தினார்.
பசியை மறந்த பிரேசிலியர்கள், ஆப்பிரிக்கர்கள்
வறுமையில் வாடிக்கொண்டிருந்த பிரேசில் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க தேசத்தைச் சேர்ந்தவர்களும் பீலேவின் கால்பந்து ஆட்டத்தைக்கண்டு தங்களின் பசியை மறந்தார்கள். அவர் அணிந்திருந்த 10-ஆம் எண் ஜெர்சி கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. 1962-ஆம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இரண்டாவது போட்டிக்குப்பிறகு காயத்தின் காரணமாக பீலே போட்டியிலிருந்து விலகினார். இருந்தபோதிலும் அவருக்கு மாற்று வீரராகக் களமிறங்கிய அமரில்டா, காரிஞ்சா ஆகியோரின் திறமையான ஆட்டத்தால் பிரேசில் 2ஆவது முறையாகக் கோப்பையை வென்று சாதித்தது.
தனிப்பட்ட தாக்குதல்
களத்தில் மாற்று அணி வீரர்களின் தொடர் தாக்குதலுக்கு (பவுல்) உள்ளான பீலே மனம்நொந்து இனி நான் கால்பந்து விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார். ஆனாலும் தனது ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்து விளையாடிய பீலே 1970-ஆம் ஆண்டு (மெக்ஸிகோ) மூன்றாவது முறையாக பிரேசிலுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் பிபாவின் முன்னோடியான யூல்ரிமா கோப்பையை நாட்டிற்கு நிரந்தரமாகப் பெற்றுத் தந்து பெருமை சேர்த்தார். பிரேசில் மக்களின் ரத்தத்துடன் கலந்துவிட்ட கால்பந்தை மேலும் மேலும் உயரங்களை நோக்கிப் பயணிக்கச் செய்தார் பீலே. 1971ஆம் ஆண்டு தனது 31ஆம் வயதில் தேசிய அணிக்காக கடைசியாக விளையாடிய பீலே ரசிகர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட போதிலும் மேற்கொண்டு விளையாட மறுத்துவிட்டார். தனது நாட்டின் சாண்ட்ரோஸ் கிளப் அணிக்காக 1958-ஆம் ஆண்டு முதல் விளையாடத் துவங்கிய பீலே ஓய்வு பெறும்வரை அந்த அணியின் சொத்தாக மதிக்கப்பட்டார்.
ஒரே ஆட்டத்தில் இரட்டை ஜெர்சி
பீலே கால்பந்துப் போட்டிகளிலிருந்து விடைபெற்றபோது நடத்தப்பட்ட போட்டி மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. பீலே நீண்டகாலம் விளையாடிய நாட்டின் சாண்ட்ரோஸ் கிளப் அணியும் அவர் விளையாடிய அமெரிக்க கிளப் அணியான காஸ்மோஸ் அணியும் (அமெரிக்காவின் இந்த கிளப் அணிக்காக பீலே ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடியுள்ளார்) மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் சாண்ட்ரோஸ் அணியின் ஜெர்ஸியையும் இரண்டாம் பாதியில் காஸ்மோஸ் அணியின் ஜெர்ஸியையும் பீலே அணிந்து விளையாடி ஆட்டத்தை உணர்ச்சிமயமாக்கினார். அப்போட்டியின் போது அவரால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் விசும்பினார்.
இறுதி மூச்சு வரை கால்பந்து
புகழுக்காக பீலே எல்லை கடந்ததில்லை. வறுமை நிறைந்த தனது சிறுவயதில் எவ்வாறு கால்பந்தை நேசித்தாரோ அதே போல் இறுதிக் காலம் வரை கால்பந்து காதலனாகவே இருந்தார். களத்திலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் பீலே என்ற பெயரை உச்சரிக்காமல் கால்பந்து இல்லை என்ற நிலையை அவர் ஏற்படுத்தினார். கால்பந்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளில் அவரது பெயர் நிறைந்து நின்றது.
- மு.சங்கரநயினார்
கால்பந்தின் அழகியல்...
கால்பந்து வெறும் ஒரு விளையாட்டல்ல. மனிதர்களை ஒன்றிணைப்பதே அதன் லட்சியம். அதில் ஏழை-பணக்காரன், கறுப்பர்கள்-வெள்ளையர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. அனைவரும் ஒன்றே. அதுதான் கால்பந்தின் அழகியல் என்பது பீலேவின் கூற்று.
1991-ஆம் ஆண்டு ஆங்கில அரசு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1995 முதல் 1998 வரை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கி பிரேசில் அரசு அவரைக் கொண்டாடியது. 1999-ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கழகம் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராக பீலேவைத் தேர்வு செய்தது. கால்பந்து உலகில் 1000-ஆவது கோலடித்ததை கொண்டாடும் வகையில் தபால் தலை வெளியிட்டது பிரேசில் அரசு.