உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அனைத்து உலகக்கோப்பைகளிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில் ஆகும். அந்த அணி 7 முறை (1950, 58, 62, 70, 94 ,98, 2002) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002) உலகக்கோப்பையை வென்று உலகக்கோப்பை சாம்பியன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்றாலும், 2 முறை உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதுதான் சோகமான விஷயம் ஆகும். கால்பந்து உலகில் பிரேசிலுக்கு பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் அந்நாட்டின் கேப்டன் ஒருவரின் ஒரே ஒரு செயல் தான் தற்போதைய விளையாட்டு உலகில் ஒரு முக்கிய வரலாறாக உள்ளது. கால்பந்து உலகக்கோப்பையை யாராலும் எந்த நாட்டினரும் வெல்லலாம் என்ற உத்வேகத்தை வித்தியாசமான ஒரு செயல் மூலம் பிரேசில் நாட்டவருக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அளித்தவர் பிரேசிலின் ஹிடெரால் டோ பெல்லினி ஆவார்.
1958-ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வென்றபோது பிரேசில் கேப்டனாக இருந்த பெல்லினி புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுப்பதற்காகக் உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்தார். பின்பு அதுவே ஒரு பழக்கமாக மாறிவிட்டது. பெல்லினி உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்த செயல்தான் இன்று ஒரு மன்னர் முடிசூட்டு நிகழ்வு போல கால்பந்து உலகில் பார்க்கப்படுகிறது. ஒருமுறையாவது தலைக்கு மேல் உலகக்கோப்பையை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற வெறி தற்போது அனைத்து நாடுகளிலும் உள்ளது. கால்பந்து மட்டுமின்றி தற்போது அனைத்து குழு விளையாட்டுப் போட்டிகளிலும் இந்த பழக்கம் உள்ளது. ஒரு சின்ன செயலை பாரம்பரிய வரலாறாக மாற்றிய பெருமைக்குரிய ஹிடெரால் டோ பெல்லினி 2014-ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.